காண்டலுங் குழைத்த வில்வேள் கடுங்கணைக் கிலக்க மாகி மூண்டவெங் காமம் மூழ்கி முரணினால் வலிந்து பற்றி ஆண்டொரு பாங்கர் எய்தி அணிமுலை பொதியப் புல்லிப் பூண்டபே ரின்ப வெள்ளப் புதுநலம் பருக லோடும் 109 | கண்டபொழுதே மன்மதனது வளைத்த வில்லின் கொடிய மலர் அம்பிற்கு இலக்காகி முதிர்ந்த கொடிய காம வெள்ளத்தில் மூழ்கித் தன் வன்மையால் வலிந்துபற்றி அங்கோர் ஒதுக்கிடம் பெற்று இறுகத் தழீஇப் பேரின்பப் பெருக்காகிய புதிய நலம் பருகும் அளவிலே. வாலி பிறப்பு அரக்கர்கோன் நகைப்ப நந்தி வெகுண்டுனை அழிப்ப வல்வா னரக்குலந் தாமே யென்னச் சபித்தவா நயந்து விண்ணோர் குரக்கினம் ஆனார் அனறே இனையவன் குரக்கு வேந்தாய்ச் சுரர்க்கிறை கூற்றால் அப்போ தாயிடைத் தோன்றினானால். 110 | இராவணன் குரங்கென்று இகழ்ந்து சிரிக்க நந்தி பெருமான் வெகுண்டு குரங்கினது கூட்டத்தால் நீ அழிக என்று சாபமிட்டனர். அசுரனது அழிவை விரும்பிய தேவர் குரங்குகளாயினர். வாலி குரங்குகளின் அரசென இந்திரன் அமிசமாக அப்பொழுது அருணனுக்குப் பிறந்தான். ஆயபின் கூத்து நோக்கி ஆவயின் நின்று போந்து சேயொளிப் பரிதித் தேர்மேல் திகழ்ந்தனன் வலவ னாகக் காய்கதிர்க் கடவுள் அங்கண் நிகழ்ந்தமை கடாவி முற்றும் வாய்மையிற் புகலக் கேட்டவ் வடிவிவண் காட்டு கென்னா. 111 | பின்பு ஆடலை நோக்கி அகன்று சூரியனின் தேர்மிசைப் பாகனாயினன். ஆங்கு நிகழ்ந்தவற்றை முற்றவும் மெய்யே ஆக வினவி அறிந்த சூரியன் அப்பெண் ணுருவைத் தனக்குக் காட்டென்று கூற, உவகைமீ தூர மேன்மேல் வேண்டலும் ஊரு வில்லான் பவளவாய் கரிய கூந்தல் பால்மொழி திதலை பூத்த குவிமுலை பரந்த அல்குல் கோல்வளைத் தளிர்க்கை தோற்றிக் கவின்உருக் கொண்டா லென்னக் காட்டினன் தனாது பெண்மை. 112 | காணும் ஆசைப் பெருக்கு மேன்மேலெழ வேண்டுதலும் துடையில்லாத அருணன் பவளத்தை ஒத்த வாயையும், கரிய கூந்தலையும், பாலை ஒக்கும் இனிய சொல்லையும், தேமல் பொலிந்த கொங்கையினையும் பரந்த அல்குலையும், திரண்ட வளையணிந்த தளிரனைய கையையும் தோன்றக் காட்டி அழகே ஓர் வடிவுகொண்டாற் போலத் தனது பெண்ணியல்பை விளக்கினன். சுக்கிரீவன் பிறப்பு காண்டலுங் கதிரோன் றானுங் காமுற்றுக் கலவி செய்ய ஆண்டகைச் சுக்கி ரீபன் ஆயிடைப் பிறந்தான் இப்பால் | |