அன்ன தன்மையின் இன்றும்அங் கவரே அருள்செய் வாரெனத் துணிபுடை மனத்தால், தன்னு தற்றலத் தடியிணை கருதித் தவங்கள் பல்பக லாற்றுழித் திகழுஞ், சென்னி ஆற்றினர் உருத்திர காயத் திரியி னோடெழிற் குமாரநல் வடிவாய், முன்னர் எய்திட நோக்கிஅம் மனுவான் முதல்வ னார்தமை உணர்ந்துகை தொழுது. அந்நிலையில் இன்றும் அவரே அருளுவார் என்னுந் தெளிவுணர்ச்சி யொடும் பெருமான் திருவடிகளைப் புருவ நடுவில் வைத்துத் தியானித்துப் பல காலம் தவத்தைச் செய்கையில் சடையிற் கங்கையொடும் குமர வடிவங் கொண் டெதிர்வரக் காயத்திரிதேவி மந்திரவலியால் முதல் வரை உணர்ந்து கையால் தொழுது, ஏற்ற தற்புரு டற்குற நினைதும் எமக்கு ருத்திரன் அருளுக என்னும், ஆற்றல் சான்றகா யத்திரி மனுவை அனைத்தும் ஆக்குவான் முறையுளி கணித்துப், போற்ற வார்ந்திழி அருவியங் குவட்டுப் பொருப்பு வில்லவர் கருணைகூர்ந் துலகந், தோற்று மாறருள் கொடுத்தெழுந் தருளத் தோட்டு வெண்மலர்க் கலைமகள் துணைவன். பொருந்திய தற்புருடற்கியையத்தியானிப்பேம். எமக்கு உருத்திரர் அருள் செய்க என்னும் சத்தி நிறைந்த காயத்திரி மந்திரத்தைச் சிருட்டி கருத்தா விதிப்படி எண்ணிப் போற்ற மேருமலையை வில்லாக உடையவர் கருணை மீக்கூர்ந்து உலகைப் படைக்குமாறு அருள் செய்து மறைந்தருளக் கலைமகளுக்கு நாயகனாகிய பிரமன். ஒருமை அன்பின் அப் புருடனை நினைந்தாங் குலகம் ஆக்குழி ஆண்மையே தோன்ற, முருகு லாங்குழற் பெண்மையும் படைப்பான் முயன்றும் எய்திலன் புந்தியின் தேர்ந்து, புருட னுக்கெனத் தற்பொருட் டெய்தும் பொருண்மை நீத்தனன் சகத்திர நயனப், புருடன் றன்னுடைப் பேரருள் நினைகேம் உருத்தி ரப்பிரான் எமக்கருள் புரிக. 6 ஒன்று பட்ட அன்பினால் அப்புருடனை எண்ணி அந்நிலையில் உலகைப் படைக்குங்கால் ஆண்தன்மையே உடைத்தாய் வடிவுகள் படைக்கப்படவே பெண்ணியல்பும் கலந்து தோன்றுமாறு படைக்க முயன்றும் பெறாது அறிவினால் நாடிப் புருடனுக்காக்கும் அப்பொருண்மறையை விடுத்து ஆயிரங்கண்ணுடைப் புருடனுடைய பேரருளை எண்ணுவேம் உருத்திரப் பிரான் எமக்கு அருளுக. என்னும் வேறுகா யத்திரி மனுவை எழிற்பு ணர்ச்சியின் உலகம்உண் டாக்க, மன்னு சீர்க்கிழ மைப்பொருள் வாய்ப்பக் கணித்து மாதவம் புரிவுழி வகிர்நாப், பன்ன கம்புனை சடைமுடிப் பிரானார் பாதி பெண்ணுருத் திகழ்தரு வடிவான், முன்னர் எய்திஇம் மனுவினைக் கணித்தாய் முளரி வாழ்க்கைநீ வேட்டது தெளிந்தேம். 7 |