அருட் கோயில், மாணப் பலமணி குயிலுந் தமனிய வடிவிற் புரிசையின் ஓக்கத்தைக், காணப் பெறுகளி காதற் கடலிடை மூழ்கித் துளைபவள் கரைகாணாள், 147 எமது பெருமானார் கட்டளைப்படி தேவதச்சன் மன நினைவினால் எடுத்த திருவருட்கோயிலினது மாட்சிமையுடைய நவமணி பதிக்கப் பெற்று பொன்னாலமைந்த வடிவுடைய மதிலின் உயர்ச்சியைப் பெருமையிற் பொலிகின்ற இமயமலை அரசனார் வளர்த்த மயில்போலும் அம்மையார் உள்ளத்துட் களிப்பெழக் காணப்பெறுங் களிப்புடைய காதற் கடலில் மூழ்கிக் கரையைக் காணாராய் அதனுட் டிளைத்தனர். விழிநீர் பொழிதர உள்ளங் குழைவு மெய்யிற் புளக முகிழ்ப் பெய்தப், பொழிகார் மழைநிகர் கற்றைப் புரிகுழல் மிசையே கையிணை குவியப் போய்க், குழுவா னவர்மிடை விண்வத்துயரிய கொடிநீள் கோபுர நெடு வாய்தல், தொழுநீர் மையினில் இறைஞ்சிப் பன்முறை துதிசெய் துவகையின் உள்புக்காள். 148 இணைவிழிகள் தாமே நீரை மழைபோலப் பொழியவும், திருவுள்ளம் நெகிழ்ந்துருகவும், திருமேனி தானே புளகம் அரும்பவும், நீருண்டகரிய மேகத்தை ஒக்கும் கற்றையாகிய சுரிகுழலின்மேல் இருகரங்களும் தாமே குவியச் சென்று தேவர் குழாம் நெருங்கும் விண்ணிடை உயர்ந்த கொடியும் நீண்ட கோபுரமும் உடைய நீண்ட திருவாயிலைத்தொழு முறைமையில் தொழுது பலமுறையும் துதி செய்து உவகையோடும் உள்ளே புகுந்தனர். அங்கட் சகமுழு தடையப் பொலிவுறும் ஐந்தாம் ஆவர ணந்தன்னில், தங்கிக் திகழ்சிவ மறையோர் முதலிய சைவர்க் கருள்செய்து வலம்வந்து, செங்கட் கதிரவர் காலத் தீயிறை யவர்மா லயனொடு செறிநான்கின், எங்கட் கிறையவள் எய்தித்தென்புடை விண்டுத் தளிஎதிர் கண்டுற்றாள். 149 அவ்விடத்தில் உலக முற்றவும் வந்து சேரவும் இடமிகும் ஐந்தாம் ஆவரணத்தில் சென்றிருந்து பொலிகின்ற ஆதிசைவர் முதலிய சைவர்க் கருளுதலைப் புரிந்து வலமாகச் சுற்றி வந்து சூரியர் வயிரவர் திருமால் பிரமரொடு செறிந்துள்ள நான்காம் ஆவரணத்தில் எங்கள் பெருமாட்டியார் எழுந்தருளி அழகிய தலத்தில் விண்டு வீச்சரத்தை எதிர்கண்டனர். விண்டுவீச்சர வரலாறு கலிநிலைத் துறை என்று கூறிய சூதனை இருந்தவத் தலைவர் நன்று போற்றினர் நலிதரும் ஐம்புலக் குறும்பு வென்ற மேதகாய் விண்டுவீச் சரம்என்ற தென்னை இன்று நீவிரித் துரைஎனக் கடாவலும் இறுப்பான். 150 | |