தங்கள் ஒப்புமை கொண்டு நண்ணு தருக்கு ணர்ந்து வெகுட்சியால், பொங்கு விம்மி மதர்த்தெ ழுந்தெதிர் போர்செ யப்புகு தன்மையின், கொங்கை வம்பு சழங்க மார்பம் அலைத்து வீறு கொளக்கதழ்ந், தங்கண் மங்கையர் வெற்பின் ஓக்கமுன் நோக்க விண்மிசை அண்மினார். 195 கொங்கைக ளாகிய தங்களொடு ஒப்புடைமை மதித்து நெருங்கு செருக்கினை அறிந்து கோபத்தால் மிக்குப் பூரித்து இறுமாப்புற் றெழுந்து எதிராகப் போர் செயப் புகுகின்ற இயல்பில் கொங்கை களானவை கச்சினின்றும் சரிந்து வெளிப்பட மார்பினை வருத்தித் தலையெடுப்புக் கொள்ளும்படி விரைந்து வானுலக மகளிர் விந்தமலையின் உயர்ச்சியை முன்னே நோக்க விண்ணில் நெருங்கினார். சிட்டி நாள்முதல் ஓய்வி லாது தினம் பொ லங்கிரி சூழ்வர வட்ட மிட்ட கறங்கின் ஓலை எனச்சு ழன்றல மந்துநைந், திட்ட கோள்கள் இராசி நாள்களும் அன்று தன்னம் இளைப்பொழிந், துட்ட தும்பு களிப்பின் வைகின ஓங்கு மால்வரை யாலரோ. 196 படைப்புக் காலமுதல் ஒழிவின்றி நாடோறும் மேரு மலையை வலம் வரலான் வட்ட மிட்ட காற்றாடியின் ஓலை போலச் சுழன்று வருந்தி மெலிந்த கிரகங்களும், இராசிகளும், நட்சத்திரங்களும், அன்று விந்த மலையின் வளர்ச்சியால் சிறிது இளைப்பாறி மனத்துள் களி துளும்பின. சிட்டி-சிருட்டி; சி்ட்டித் தொழில் (கந்தர் கலி வெண்பா 92) மேற்படி வேறு மாயி ருங்கனக மாம லைத்தலையின் மன்னி வன்குயவன் நேமியின், ஞாயி றாதிகளை இடைய றாதுதுகடு கச்சு ழற்றிநனி தளர்வுகூர், பாய சீர்த்திமிகு துருவ னுஞ்சிறிது பணியொ ழிந்துறை நலம்பெற, மீயு கந்தமணி அருவி தாழ்நெடிய விந்த வெற்புதவி செய்ததால். 197 மிகப்பெரிய மேருமலையின் சிகரத்தில் நிலைத்து நின்று வல்ல குயவன் தனது சக்கரத்தைச் சுழற்றுவதுபோலச் சூரிய சந்திரர் முதலானோரை ஒழிவின்றி விரையச் சுழல்வித்து மிகத் தளர்ச்சி உற்ற பரவிய மிகு புகழினையுடைய துருவனும் சிறிது தொழிலில் ஓய்வு பெற்றிருக்கின்ற நன்மையை அடைய மேலுயர்ந்த, மணிகளைக்கொண்டிழிகின்ற அருவிகளை யுடைய நீண்ட விந்தமலை, உதவி செய்தது. ‘உகப்பே உயர்வு’ (தொல் உரி.). நாளும் கோளும் துருவன் சூத்திரத்துப்படல் (இரண்டா.நக. 267) காண்க. அருவி தாழ்சயிலம் ஒளிவ ழங்குநெறி தனைஅ டைத்துமிசை அணவலால், ஒருபு டைத்திமிரம் மொய்ப்ப மற்றையொரு புடையு |