பதிகம் எழுசீரடி யாசிரிய விருத்தம் சிவபரஞ் சுடரைப் காண்டகும் ஏதுச் செய்தவர் வினாவியவாறும், தவலருஞ் சிறப்பின் நந்திஎம் பெருமான் சனற்குமாரனுக்குவெஞ் சாப, நவையறுத் தருளிச் செவியறி வுறுத்த நலமெலாஞ் சூதமா முனிவன், அவர்தமக் கியம்பிப் பிஞ்ஞகன் உமையாட் கருளிய உண்மைசெப் பியதும் 1 பதிகம்-பலவகைப் பொருள்களையும் தொகுத்துக் கூறுதல்- சமட்டி ஆகக் கூறுதல் என்ப வடமொழியாளர். சிவபெருமானை எளிதில் தரிசிக்கத் தகுந்த உபாயம் (சாதனம்) யாதெனத் தவஞ்செய்த முனிவரர்கள் சூத முனிவரை வினாவியதும் கெடாத மேன்மையை யுடைய திருநந்தி தேவர் சனற்குமாரருக்குத் தாமே சாபம் தந்து பின்னர் நீக்கி உபதேசம் செய்த நலத்தையும், சிவ பெருமான் உமையம்மைக்குக் கூறியருளிய உண்மையையும் எடுத்துக் கூறியதும். செய்தவர், தவம் செய்தவர் என மாறுக. செவியறிவுறூஉ-உபதேசம். பிஞ்சகன்-இளம்பிறை, கங்கை, கொன்றை முதலிய தலைக்கோலம் உடையவன்; கன்னியாழ்க் கிழவன் வரம்பெறு காரைக் காட்டினிற் பூசனை உஞற்றி, மின்னவிர் மணிப்பூண் சிவியெனும் மகவான் வீடுபேறெய்திய வாறும், பொன்னுடைப் புத்தேள் புண்ணிய கோடிப் புனிதனை அருச்சனை யாற்றி, அன்னஏ றுகைக்கும் அண்ணலோ டுலகை உண்டுமீட்டுதவிய வாறும். 2 மிதுனம், கன்னியா ராசிகளுக்குரிய புதன் வரம்பெற்ற திருக்கச்சி நெறிக் காரைக்காட்டினிற் சிவபிரானைப் பூசனை யாற்றி மின்னலைப்போல ஒளி வீசுகின்ற மணி அணியைப் பூண்ட சிவி யெனும் இந்திரன் வீடுபேற்றினை அடைந்ததும்; திருமகள்நாயகனாகிய திருமால் புண்ணியகோடியில் உள்ள தூயோனைப் பூசனை செய்து அன்னம் ஊரும் பிரமனொடு உலகை உண்டு (ஒடுக்கி) மீளப் படைத்ததும்; மிதுனம் கன்னி ராசிக்குரியோன்-புதன். உஞற்றி-செய்து. மகவான்- அசுவமேதம் நூறு செய்தோன்; இந்திரன். அத்தகு மாயோன் வலம்புரிக் களிற்றை அடியிணை வணங்குபுதனாது, கைத்தலத் திழந்த தெம்மருள் சிலைப்பிற் கதிர்வளை தனைப்பெறு மாறும்,மெய்த்தபே ரன்பின் மலர்மிசைக் கடவுள் வேள்வி செய் குயர்சிவாத் தானத், துத்தமன் அருளான் மாயனோ டுலகை உண்டுமீட் டுதவிய வாறும். 3 |