அச்சிறப்பினையுடைய திருமால் வலம்புரி விநாயகர் திருவடிகளை வணங்கிப் பகைவர் மனமயங்குதற்குக் காரணமாகிய ஒலியினையுடைய பாஞ்ச சன்னியத்தை மீளப்பெற்றதும், பிரமன் உண்மை யன்பொடும் யாகம் செய்து உயர்ந்து சிவாத்தானத்துப் பெருமான் அருளைப் பெற்றுத் திருமாலையும், உலகையும் உண்டு, மீளப்படைத்தவரலாறும்; கருகிருள் விடத்தை இறையவன் பருகக் காட்டிய அறக்கடை தணப்ப, இருமறை விதியாற் கடவுளர் மணிகண் டேசனை ஏத்தியவாறும், மருளுறு செருக்கிற் பொய்யுரை கிளந்த வல்வினை கழிதர வியாதன், பொருவருஞ் சார்ந்தா சயப்பெரு வரைப்பிற் பூசனை இயற்றிய வாறும். 4 பல்லுயிரும் கருக வந்த ஆலகால விடத்தை இறைவன் பருகுதற்குக் காரணமான பாவம் நீங்கப் பெரிய வேத விதிப்படி தேவர்கள் மணிகண்டேசப் பெருமானைப் பூசித்ததும்; வியாச முனிவரன் மயக்கம் மிகு செருக்கினால் பொய் கூறி அதனால் வந்த தீவினை நீங்க ஒப்பரிய சார்ந்தாசயத்தில் இறைவனைப் பூசனை செய்ததுவும்; அறன் கடை-பாவம் (திருக்.142) வீட்டினை விழைந்தேழ் முனிவரும் பூசை வேறுவே றியற்றிய வாறும், கோட்டமில் கொள்கைப் பராசர முனிவன் தொழுதுதன் தாதையர்க் கொன்று, மாட்டிய அரக்கன் குலத்தொடு மடியச் செற்றதும் விளக்கொளி மாயோன், நாட்டம்மூன் றுடைய நாதனைப் பரவி நதிதடுத் தோம்பிய வாறும். 5 அத்திரி முதலிய முனிவர் எழுவரும் வீடு பேற்றினை விரும்பித் தனித்தனி இடங்களில் (சப்த தானம்) வழி பாடு செய்ததும்; மாறுபாடில்லாத கொள்கையையுடைய பராசர முனிவர் பூசை இயற்றித் தன் தந்தையைக் கொன்ற சுதாசன் என்னும் அரக்கன் தனது குலத்தோடு அழியத் தான் செய்த வேள்வியிற் கொலை செய்ததும்; விளக்கொளி வடிவமாய்த் திருமால் முக்கண் முதல்வனை வணங்கி வேகவதி நதியைத் தடுத்துப் பிரமன் யாகத்தினைக் காத்ததும்; கொன்று மாட்டிய, ஒருபொருட் பன்மொழி. நாட்டம்-கண். ஈண்டிய புகழ்முத் தீச்சரம் பரசி ஈன்றவள் சிறையினை விடுவித், தாண்டகைக் கலுழன் நஞ்சுபில் கெயிற்றுப் பணிகளை அலைத்தெழு மாறும், நீண்டவன் உணராத் திருவடி போற்றி நெளியுடற் பணிகளும் எம்மான், பூண்டுகொண் டருளப் பெற்றமே தகவாற் புள்ளினை வினாவிய வாறும். 6 ஆளுந் தன்மையினையுடைய கருடன், செறிந்த புகழமைந்த முத்தீசப்பெருமானை வணங்கி மாற்றவள் வைத்த சிறையினின்றும் தன் தாயை வீடுகொண்டு விடத்தை உமிழ்கின்ற பற்களையுடைய பாம்புகளை |