வருத்தி எழும் வரலாறும்; நெளிந்து செல்லும் உடம்பினை யுடைய பாம்புகளும் நெடிய வடிவு கொண்ட திருமால் அறியாத்திருவடிகளைப் போற்றி எம்மிறைவன் அப்பாம்புகளை அணிகலமாகப் பூண்டு கொண்ட வலிமையினால் கருடனை நோக்கிச் ‘சுகமோ’ என்று வினாவியதும்; கருடனால் அலைக்கப் பெற்ற அப்பாம்புகள் அக்கருடனை அலைக்கும் வன்மை பெற்றமை குறித்துப் ‘பணிகளும்’ என்றோதினர். இறுதிநா ளிருவர் காயம்மேல் தாங்கி வியாழமும் இயமனும் வழுத்த, மறுவறு காயா ரோகண வரைப்பின் எம்பிரான் மன்னிய வாறும், அறுகணி வேணி மஞ்சள்நீர்க் கூத்தர் அடியிணை அருச்சனை செய்து, தெறுபுலன் அவித்த சித்தர்எண் ணரிய சித்திபெற்றுய்ந்திடு மாறும். 7 ஊழிக்காலத்தில் பிரமவிட்டுணுக்களுடைய உடலைத் தாங்கி வியாழனும் (குரு), இயமனும் துதிக்கக் குற்றமற்ற காயாரோகண மென்னுந்திருத்தலத்தில் எழுந்தருளியதும்; அறிவைக் கெடுக்கின்ற ஐம்புலன்களை வென்ற சித்தர்கள் அறுகினை யணிந்த சடைமுடியையுடைய இறைவனை மஞ்சள் நீர்க்கரையில் அருச்சித்துச் சித்தி பெற்றதும்; மாதவன் பரசிப் பிருகுவன்சாப வன்பயந் தபப்பெறு மாறும், மேதகும் ஒருசார் முனிவரர் மதங்கன் வெண்கரி போற்றியவாறும், ஏதமில் வெள்ளி மொழிப்படித் ததீசி இட்டசித் தீசனைத் தொழுது, கோதறு வயிர யாக்கைபெற் றோங்கிக் குபன்றனைப் புறங்கண்ட வாறும். 8 திருமால் வணங்கிப் பிருகு முனிவருடைய கொடுஞ்சாப விளைவின் பெரும் பயம் கெடப் பெற்றதும்; மேன்மை பொருந்திய ஓர் சூழலில் முனிவரரும், மதங்கரும், ஐராவதமும் போற்றியதும்; ததீசி முனிவர் குற்றமில்லாத சுக்கிரன் ஆணைப்படி இட்டசித்தீசனைத் தொழுது குற்றம் நீங்கிய வச்சிர சரீரம் பெற்றுயர்ந்து குபன் என்னும் அரசனைத் தோற்றோடச் செய்ததும்; அந்தணன் கச்ச பாலயத் திறைஞ்சிப் படைத்திடும் ஆற்றல் பெற் றதுவும், பைந்துழாய்க் கூர்மம் ஆயிடைப் பரசிப் பாதகந் தவிர்ந்துய்ந்த வாறும், மைந்துறு மாண்ட கன்னிமா முனிவன் வழுத்திவான் அரம்பையர் ஐவர், சந்தனந் திளைக்கும் இளமுலைப் போகந் தரைமிசை நுகர்ந்துவாழ்ந் ததுவும். 9 பிரமன் கச்சபாலயத்தில் வணங்கி உலகைப் படைக்கும் ஆற்றலைப் (சத்தி)பெற்றதும்; பசிய துழாயணிந்த ஆமை வடிவுகொண்ட திருமால் அக்கச்சபாலயத்தில் வழிபாடு செய்து பெரும்பாவம் நீங்கிப் பிழைத்ததும்; வலிமை மிக்க மாண்ட கன்னி என்னும் பெருமுனிவன் இறைவனைப் பூசித்து, அப்பேற்றினால் விண்ணுலக வாழ்க்கையை மண்ணுலகில் வானுலக அரம்பையர் ஐவரொடும் நடத்தியதும்; |