மகதியாழ் முனியும் புத்தருக் கிறையும் வளம்பொழில் திருக்கயிலாயப், பகவனைத் தொழுது முப்புரத் தவரை மருட்டிய பாவம்மாற்றியதும், இகலுநர்ச் செகுப்ப இராகவன் வழுத்தி எறுழ்வலி எய்திய வாறும், புகழுறுங் கற்கி போற்றுபு கடைநாள் கயவரைப் புரட்டிய வாறும். 13 மகதியாழுக்குரிய நாரதரும், திருமாலும் சோலை சூழ்ந்த திருக்கயிலாயப் பெருமானைத் தொழுது திரிபுரத்தசுரரைச் சிவநெறியினின்றும் பிறழ்வித்த பாவம் தீர்ந்ததும்; இரகு வமிசத்துத் தோன்றிய இராமன் தன் பகைவரை அழிப்ப வேண்டி இறைவனைத் துதித்துப் பெருவன்மை பெற்றதும்; புகழ் மிகும் கற்கி (குதிரை) முதல்வனை வணங்கி யுக முடிவில் அசுரரை அழித்ததும்; எறுழ்வலி - மிக்க வலிமை; (அந்தகேசம்-1ல் எறுழ்வலி) மீமிசைச் சொல். தலைவர் மூவர் தவிர முப்புரர் வழிபாடு கைவிட்டமையை முப்புராரி கோட்டப் படலத்துட் காண்க. நறைமலர்ப் பனந்தார் முடியவன் வழுத்தி நலம்பயில் வரம்பெறுமாறும், அறைகழல் மகவான் தொழுதுசெல் லுருவாய் அச்சுதன் சென்னியைத் துணித்து, நிறைபெருங் கீர்த்தி கவர்ந்துமீட்டுய்யப் பூசனை நிகழ்த்திய வாறும், மறையவன் தலையைக் கொய்துவெம் பலிதேர் வயிரவன் பூசித்த வாறும். 14 பலராமன் பேறு பெற்றதும்; இந்திரன் தொழுது (புற்றிடைச்) செல் வடிவாய்த் திருமாலின் தலையைத் தடிந்து, நிறைந்த பெரிய மிகுபுகழைக் கவர்ந்து, பின்பும் பிழை தவிரப்பூசனை நிகழ்த்தியதும்; பிரமன் தலையைக் கொய்து அதன்கண் பலி தேர்ந்த வயிரவர் பூசை செய்ததும். செந்நீர் ஏற்றமையின் வெம்பலி என்றனர்; யான், எனது என்னும் இரண்டனையும் கைவிடப் பலி தேர்தலின் விரும்பத்தக்க பலி என்பார் வெம்பலி என்றனர் எனலுமாம். விண்டுநேர் விடுவச் சேனனார் பரவி வீரபத் திரன்நிறத் தணிந்த, வெண்டலை விழுங்கும் ஆழியை விகடக் கூத்தினால் எய்தியவாறும், மிண்டினால் வேள்வி ஆற்றிய தக்கன் வினைகெட அருச்சித்த வாறும், விண்டவர் புரத்தின் உய்ந்திடும் மூவர் தொழுதுமெய் வரம்பெறு மாறும். 15 விடுவச் சேனர் வணங்கி வீரபத்திரர் மார்பிடையணிந்துள தலை மாலைத் தலை விழுங்கிய திருமாலின் சக்கரப்படையை விகடக்கூத்தினால் பெற்றதும்; தக்கன் செருக்கொடு செய்த வேள்வியை அழித்தவழி, அத்தக்கன் வழிப்பட்டுய்ந்ததும்; முப்புரப் பகைவரில் மூவராகிய சுபுத்தி சுதன்மா சுசீலர் தொழுது மெய்வரம் பெற்றதும்; திருக்கைலையில் திருநந்தி தேவர் ஒப்ப வைகுந்தத்தில் விடுவச் சேனர் ஆகலின், திருமாலை ஒத்த விடுவச்சேனர் எனப் பெற்றனர். (நந்தி தேவர் அபரசம்பு எனப்பெறுவர்) |