பக்கம் எண் :


118புலவர் குழந்தை

   
           17.   முல்லை யேமன் முதலிய
                நல்லி யல்புறு நானிலத்
                தெல்லை மேவிய யாவரும்
                இல்லை வேறிவ ரின்றியே.

           18.   முல்லை யாயர் முகில்வள
                ரெல்லை காணி னிறவுளர்
                செல்லி னெய்தல் திமிலரே
                ஒல்லி வாழி னுழவரே.
 
அறுசீர் விருத்தம்
 
           19.    தூயகைத் தொழிலி னோடேர்த் தொழிலொடு வணிகந் துன்னி
                 ஆயமுத் தொழிலி னோடாங் கமைகுடித் தொழில்க ளெல்லாம்
                 ஏயவ ருயர்வு தாழ்வ தின்றியே புரிந்து நாளும்
                 தாயவத் தொழிலுக் கேற்பத் தனித்தனிப் பெயர்பெற் றாரே.

           20.    பானுரை போலப் பஞ்சின் பட்டினன் மயிரிற் பொன்னின்
                 நூனிரைத் துள்ளங் கொள்ள நுணுகிய சாய மேற்றி
                 மேனிலத் தவர்மீக் கொள்ள விழைதரு வனப்பிற் றாகப்
                 பூநிரைத் தணியா ராடை புதுமையி னெய்வார் நெய்வார்.

           21.    ஐவகைப் பொன்னிற் றாரி னவிர்மணி யொடுகல் மண்ணில்
                 கைவகைக் கலனும் பன்மைக் கருவியு மேனந் தானும்
                 செய்வகைப் படியே தட்டார் திறன்மிகு தச்சர் கொல்லர்
                 மெய்வகைக் குயவர் கன்னார் வேதர்கற் றச்ச ரானார்.

           22.    அழுக்கற வெளுத்து வண்ண மாக்குவோர் வண்ணார் பின்னர்
                 மழுக்குற மயிரை நொய்தின் மழிப்பவர் மழிப்பர் வாய்மை
                 ஒழுக்குற வரிதி னோவந் தீட்டுவோ ரோவர் மற்றும்
                 வழக்குறு தொழில்க ளெல்லாம் வகைப்படுத் தப்பேர் பெற்றார்.

           23.    பல்வகைப் பறையின் யாழின் பாகுசெய் குழலின் வாயிற்
                 சொல்வகை யமையத் தாளத் தொகையுட னராகம் வாய்ப்ப
                 நல்வகை யிசையுங் கூத்தும் நலம்பட விசைக்க மேலோர்
                 பல்வகைப் பெயரி னோடு பறைப்பொதுப் பெயர்பெற் றாரே.
------------------------------------------------------------------------------------------
           18. முகில்வளர் எல்லை - மலை, குறிஞ்சி. இறவுளர் - குறிஞ்சி நிலமக்கள்.
ஒல்லி - பொருந்தி. 19. குடித்தொழில் - வெளுத்தல், மழித்தல் முதலியவை. 20. பால் +
நுரை. நூல் நிரைத்து - நூல்களை வரிசையாகப் பாய்ச்சி. பூ - பூ வேலைப்பாடு. 21. தாரு
- மரம். கற்றச்சு - சிற்பம். 22. ஓவம் - சித்திரம்.