பக்கம் எண் :


இராவண காவியம் 133

   
          27.     வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்து
                 தாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மை
                 ஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்
                 போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார்.

          28.    தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ள
                 ஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறி
                 ஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்
                 பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார்.

          29.    என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்
                 கன்றினொடு தூங்கிவரு கைப்பிடி புணர்ந்த
                 வென்றுகொடு வந்தவெறி வேழமது தந்து
                 நன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார்.

          30.     மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும்
                 பாணரொடு கூடவரு பாடினியர் கொள்ளச்
                 சேணமரு வுங்குதிரை தேரொடு கொடுத்துங்
                 காணிய படிக்கவர் கலைத்தமிழ் வளர்த்தார்.

          31.     தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தா
                 ராய்க்கொலை புரிந்தவட வாரியரின் மானச்
                 சேய்க்குண மிலாதவிழி தீயரை யொறுத்தே
                 தாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார்.
 
கழகம் - ஷ வேறு வண்ணம்
 
         32.      பல்வளப் புடையதென் பாலி நாட்டிடைக்
                 கல்வளப் பஃறுளி யாற்றின் கண்ணமர்
                 நல்வளப் புடையதொன் னகர மேவிய
                 சொல்வளப் படுதமிழ் சுவைத்த பாண்டியன்.

         33.      புலக்கணி னுணர்தமிழ்ப் புலவ ராக்கிய
                 இலக்கிய விலக்கண வெண்ணில் நூல்களை
                 நலக்குறு புலவர்தங் குழுவி னாப்பணோர்
                 அலக்குறு பொருணல மாய வெண்ணினான்.
------------------------------------------------------------------------------------------
         31. சேய்க்குணம் - தாயைப் பேணுங் குணம். 32. கல் - மலை. 33. புலக்கண்
- அறிவுக்கண். அலகு உறு - அளவுபட்ட, பகுதிப் பட்ட அது, அகம் புறம்.