13. மன்னரைப் பாடி முன்னர் வண்டமிழ்ப் புலவர் பின்னர்த் தன்னையா னாது பாடல் தகவில வினியம் மன்னர் இன்னுயி ரெனவே போற்று மிருந்தமிழ் நாடு கொண்டு மன்னனாய் வாழ வெண்ணி வளைகட லிருந்த தம்மா. 14. தனித்தனிப் பொருளிற் றோய்ந்து தமிழொடு முரணி யாங்கே இனித்திடு மினிமை யெல்லா மெதிர்த்துமு னிற்க வாற்றாப் பனித்தவை புகல டைந்து பணிந்ததா லினிமை காணாக் கனைக்கடல் தமிழை யுண்ணக் கருத்திடைக் கொண்ட தம்மா. 15. அரும்பொரு ளடைதற் காக வாங்குநின் றீங்குப் போந்து வரும்பொருட் காகத் தீர்ந்த வடவரை யெள்ளி நாட்டை ஒருங்குறு பொருளோ டாளு முரிமையுங் கொள்ள வெண்ணிக் கருங்கடல் வடவர் நாணக் காலம்பார்த் திருந்த தம்மா. 16. கழகமோ டமர்ந்து தென்னர் கனிதமி ழாய்ந்தாய்ந் தன்னார் வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் நம்மோர்க் கழகல வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப் பழகவே யேற்ற காலம் பாத்துமே யிருந்த தம்மா. 17. நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் இல்லிடத் திருந்த ளாவி யின்புறு மறிஞர் போலச் சொல்லிடத் தினிய வின்பந் தோய்தமி ழுறவை நாடிப் புல்லியே யளவ ளாவப் பொருகடல் நினைத்த தம்மா. 18. எண்டிசை யவாவு மின்பத் தியைந்துகட் டழகி னோடு பண்டணி யாடை தாங்கும் பசுந்தமிழ்த் தாயை நேரிற் கண்டவர் பொல்லாக் கொள்ளிக் கண்படு மென்றி ரங்கித் தெண்டிரைக் கடலும் பாவம் திரைப்படாம் போர்த்த போலும். 19. தண்ணுமை தாளத் தோடுந் தழங்கியாழ்த் திறத்தி னோடும் நண்ணிய வராகத் தோடும் நல்லிசைத் தமிழர் பாடும் பண்ணமை தமிழின் றூய பாட்டினைக் கேட்டுக் கேட்டுக் கண்ணிய கடலு முள்ளக் களிப்பினாற் பொங்கிற் றம்மா. ----------------------------------------------------------------------------------------- 13. ஆனாது - பொருந்தாது. 14. பனித்தல் - நடுங்குதல். கனைத்தல் - ஒலித்தல். 15. வரும்பொருள் - வளம், பெரும் பொருள். தீர்தல் - அன்பினீங்கல் | |
|
|