84. தாமரை சூழளி தாமென நல்லார் மாமுர சொன்றை வலமுறச் சூழ்ந்தே ஆமரக் கோல்கொண் டடித்தெழு தாளத் தேமுறப் பாடி யிழைப்பர்தெள் ளேணம். 85. செந்தமிழ் பாடித் தெரிவையர் கூடி உந்தி பறந்துள் ளுவக்குவ ரோர்பால்; தெந்தன மென்னச் சிலம்பு புலம்பப் பந்துக ளாடுவர் பாவைய ரோர்பால். 86. ஒழுங்குற வேழ்முத லொன்றிறு வாக வழங்குறு மெண்ணின் வகையுறப் பாடிக் கொழுங்கனி போலக் குடங்கை படுத்துக் கழங்குவந் தாடிக் களிக்குவர் நல்லார். 87. எம்மனிர் மூன்றிதோ வேழ்மணி யென்று பொம்மென வங்கை புறந்தர வீசிக் கம்மெனக் காய்கள் கறங்கினிற் போத அம்மனை யாடு மரிவைய ராயம். 88. பின்னலும் வல்லியும் பின்னுமுன் சாடக் கன்னலுங் கைப்பக் கனிதமிழ் பாடித் தென்னையில் யாத்த செழும்புரி யுசல் துன்னியே யாடுவர் தோகை மயிலார். 89. முற்றிலிற் றிங்கள் முகத்தை மறைத்தே தெற்றியி லேறிச் சிறுமிய ரேசக் கொற்றவர் மானக் குறுநடைச் செல்வர் சிற்றில் சிதைத்துச் செருக்கொடு செல்வர். 90. சிற்றிலிற் பேதையர் செங்கழற் செல்வர் துற்றிட வெண்மணற் சோறு படைத்தும் மற்றும் புதுக்குடி வாழ்க்கை நடப்பைப் பெற்றவர் கண்டு பெருமகிழ் கொள்வர். ------------------------------------------------------------------------------------------- 84. இவ்விருவர் கைகொட்டி யாடுவதும் ஒருவகைத் தெள்ளேணமாம். 86. குடங்கை - உள்ளங்கை. 87. புறந்தர - பாதுகாக்க. கறங்கு - காற்றாடி ஆயம் - கூட்டம். 88. பின்னல் - சடை; வல்லி - பொற்கொடி; புரி - கயிறு 89. முற்றில் - முச்சி (சிறுமறம்) தெற்றி - திண்ணை. சிற்றில் - மணல் வீடு. 90. துற்றிட - உண்ண. | |
|
|