125. முத்தமிழ் வளர்ச்சிக் கேற்ற முறைப்படி யமைக்கப் பட்ட ஒத்தவா டரங்குங் கேள்விக் குகந்தபா டரங்கு மாய்நூற் கைத்திறந் தமைந்த வாய்கைக் கருவிக ளோடு பாட்டாட் டொத்திகை யரங்கு மேலோ ருளமெனப் பொலியுந் தானே. 126. இந்நக ருலகின் கண்ண ரியன்றியல் பொடுமீக் குள்ள எந்நகர் களுமொப் பாகா வெனத்தமிழ்ப் புலவர் போற்றும் நன்னகர்க் குரிய வெல்லா நலங்களும் பொருந்தி நாட்டு முன்னக ராகிச் செங்கோன் முறையொடு பொலிந்த தம்மா. 127. இலகுநா கரிக வாழ்வுக் கேற்றதா வெறிநீர் சூழ்ந்த உலகெலா முயர்வு தாங்கி யுள்ளபல் பொருள்க ளெல்லாம் நிலவியாங் கிருத்த லாலே நீண்மதி லிலங்கை மூதூர் அலைகட லுலகங் காணு மாடிபோற் பொலியு மம்மா. 128. தமிழகக் குளத்திற் பூத்த தாமரைப் பூவின் சீருர் கமழிதழ்த் தெருவஞ் செந்தேன் கனிபொகுட் டண்ணல் கோயில் இமிழிசைச் சுரும்பின் மக்க ளினியபூந் துகளின் செல்வம் உமிழ்நறுந் தெளிவி னின்ப மொருங்குதுய்த் துவக்கு மன்னோ. | மும்மதில் | 129. அம்மர பிலக பேரூ ரகமிடை புறம தென்ன மும்மையி னமைந்த மொய்ம்பின் முழுமுத லரண மென்னும் எம்மையு மிணையி லாத வெழின்மிகு கோட்டை நாப்பண் செம்மலின் றிருவே யென்னச் சிறந்துவீற் றிருக்கு மம்மா. 130. புறமதிற் புறத்தே சூழ்ந்து பொலிதரு கிடங்கொன் றந்தத் திறமிகு மதிலைக் காக்குந் திறலென வமைந்து கொல்லும் மறவரிற் றறுக ணாண்மை வலிமிகு முதலைக் கூட்டத் துறையுளா யகன்றாழ்ந் தொன்னா ருலப்புற விளங்கு மாதோ. ------------------------------------------------------------------------------------------- 127. ஆடி - கண்ணாடி. 128. தெளிவு - தேன். 129. மொய்ம்பு - வலி. எம்மையும் - எங்கும். செம்மல் - தலைமை. 130. தருகண் - அஞ்சாமை. | |
|
|