பக்கம் எண் :


இராவண காவியம் 19

   
    
     ழுநெஞ்சழுத்தமும்ழு அதிகம் வேண்டுமல்லவா? அஃது ஆசிரியருக்கு அப்படியே
அமைந்திருக்கிறது. எங்ஙனம் எனில், அவர் முன்னாள் கவிபோல ஆரியரின் போற்றுதல்,
அரசர்களின் மாலை மரியாதை ஆகியவற்றினைப் பெறும் எண்ணம் கொள்ளாமல்,
மககள் மன்றத்திற்கு, மனத்திற்பட்ட உண்மையை எடுத்துரைப்பதே தமிழன் மாண்பு என்ற
கொள்கையினராவர். அவர் தன்மான இயக்கத்தவர். எனவே, தகுமா? முறையா? ஏற்றதா?
என்ற கேள்விகளை அல்ல, சொல்லித்தீர வேண்டும் - உண்மை வெல்லும் - இன்று
அல்லது நாளை என்ற உறுதியைத் துணைக் கொண்டு இந்நூலைச் செய்துள்ளார்.

     இராமனும் இராவணனும் - உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா?
அல்ல கற்பனைகள். இதனைக் கூறத் தன்மான இயக்கத்தார் தயங்குவதி்ல்லை. ஆனால்,
அவர்தம் கேள்விகட்குத் தக்க விடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே, செந்தமிழை
வாணிகம் செய்வோர், இராமயணம் ஓர் கற்பனைக் கதை என்றுரைப்பரே யொழிய,
மற்றைப்போதினில், இராமனை நிஜ புருஷனாகவே எண்ணுவர் - மதிப்பர் - வணங்குவர்.
ஆராய்ச்சிக் கூடத்தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பஜனை மனப்பான்மை
குறையும். மற்றப் போதெல்லாம் அவர்கள் இராமதாசர்களே.

     தன்மான இயக்கத்தவர் - இராவண தாசர்களல்லர். இராவணனுக்குக் கோவில்
கட்டிக் கும்பாபிஷேகம் செய்வித்துப் பூஜாரிகளாக வேண்டும் என்பதற்காக அல்ல இக்
காவியம் புனைந்தது. பழி சுமத்தினரே பண்டைக் கவிஞர்கள் இராவணன் மீது. இது
முறையல்லவே, துருவிப் பார்க்குங்கால் விஷயம் முற்றிலும் வேறாகவன்றோ உளது என்று
எண்ணித் தீட்டியதே இந்த ஏடு.

     இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல்.
இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும் மயக்க நீக்கு மருந்து இது. ழுதாசர் நிலை
கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா!ழு
என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துள்ளது.

     இராமாயணம் தீட்டப்பட்ட காலம், இந்த பரந்த பூபாகத்திலே இருவேறு
கலாச்சாரங்கள் மோதத் தொடங்கிய நேரம். இது பண்பாடு, மக்கள் உளநூல், நாட்டுநிலை
அறிவோர், அறிந்தோர் கண்ட உண்மை.