79. வண்டா ரோல மிடுகின்றார் மணிப்பொன் னணியார் மொய்க்கின்றார் உண்டே தொய்யில் உவக்கின்றார் ஒண்கழு நீரார் ஒக்கின்றார் கண்டே கண்ணார் நிலநோக்கிக் கயலிற் பிறழ்ந்தே களிக்கின்றார் தண்டா நின்றஞ் சும்மிவளோர் தமிழ்ப்பெண் ணரசி யேயாவாள். 80. மாலை தொடரும் அளியோட்டும் மலர்க்கை கொண்டு முகந்துடைக்கும் காலை நிலத்தே நனிதேய்க்கும் கண்ணை யுறுத்துங் கையுதறும் மேலை யாடை தனைத்திருத்தும் விம்முங் கனைக்கும் இவ்வாறு பாலை நிகர்க்கு மொழியாட்குப் பறிப்பி னுரைப்பான் குறிப்புரையே. 81. தண்ணஞ் சுனையின் நீராடுந் தகையள் போல நடுக்குற்றே உண்ணுங் கரும்பி னிருகைகள் உயர்த்தி முயங்குங் குறிகாட்டும் வண்ணந் துவரென் றுவமிக்கும் வாயோ திமங்கண் டஞ்சுநடைப் பெண்ணு நம்மைப் பிரிகில்லாப் பெய்நீர் போலு முணர்வினளே. ------------------------------------------------------------------------------------------- 79. தண்டா நின்று - நீங்காது நின்று. இது, தெளிதல். களவு. 5 80. பறிப்பு - வெளிப்பாடு. இது தலைவன் குறிப்புரை. களவு - 6. 81. இது தலைவன் கூற்று. முயங்குதல் - கூடுதல். ஓதிமம் - அன்னம். பெய்நீர்போல உணர்வு - புதுக்குடத்திலூற்றிய நீர் கசிதல்போல உள்ளக் குறிப்பை வெளிக்காட்டுதல். இது, தலைவி குறிப்புரை. களவு - 7 | |
|
|