பக்கம் எண் :


202புலவர் குழந்தை

   
         86.    பூங்கைப் போதால் முகமதியம்
                    பூத்த குவளை மலர்மூடும்
               பாங்கிற் பூத்த பூங்கொம்பிற்
                    பதுங்கி மறையு மதுகண்டு
               தூங்க லின்றி யேமேவார்
                    துடுக்குத் துடுக்கென் றேகிடக்க
               ஓங்கு மாண்மைக் கதிர்வேலா
                    னொன்றுந் தோன்றா திரங்குவனால்.

         87.    காரைப் போர்த்த முகமதியங்
                    கவிழ்ந்து நாணி யிருகையுஞ்
               சேரக் கட்டித் தழுவுதல்போற்
                    செய்து மயிலுஞ் செம்மாக்க
               நீரைத் தேக்கி நிலந்திருத்தி
                    நெல்லுண் டாக்குந் தமிழ்நாடன்
               பீரைப் போர்த்த கொடிநின்னைப்
                    பிரியேன் பிரியே னெனவுரைத்தான்.

         88.    நின்னைத் தந்த விக்குன்றும்
                    நீண்ட பொழிலு மிந்நாளும்
               உன்னைப் போல நணுகியெனக்
                    குளநா ளளவு முறவாக
               மின்னைத் தந்த திருமேனி
                    வேலைத் தந்த மையுண்கண்
               பொன்னைத் தந்த பூந்தேமற்
                    பூப்பே யுன்றன் காப்பென்றான்.

         89.    போது போதாய்ப் போயூதிப்
                    பூந்தா துண்ணும் பொறிவண்டே
               மாதர் கூந்தல் போலுள்ள
                    மணக்கும் பூநீ கண்டாயோ
               கோதை சுமந்தே யுடலிளைத்தாள்
                    குழலை நீத்திவ் விடம்விட்டுப்
               போதல் துணிந்த வென்னோடு
                    போதா யோநீ புகல்வாயே.
-------------------------------------------------------------------------------------------
         86. இது, இடையூறு கிளத்தல், நீடுநினைந் திரங்கல் என்னும் (கள. 11:4, 5) துறைகள். 87. செம்மாத்தல் - மிகக்களித்தல். பீர் - பசலைநிறம் 88. நணுகி - நெருங்கி. தேமல் - சுணங்கு. 89. கோதை - மாலை. (கள-9)