பக்கம் எண் :


இராவண காவியம் 205

   
4. கைகோட் படலம்
 
        1.      சந்தடர் பொழிலிடைத் தமிழர் வாழ்வுற
               வந்தநம் மண்ணலும் வாட்க ணங்கையும்
               முந்திய காட்சியின் முறைமை கண்டனம்
               எந்தைய ரிறைவியி னியல்பு காணுவாம்.

        2.      கடிகமழ் சோலையிற் கண்ட காதலன்
               வடிவவள் மனத்தொரு வடிவு கொண்டதால்
               துடியிடை காதலந் துணைவன் றன்னையோர்
               நொடிபிரி கினும்பொறா நுணிய ளாயினள்.

        3.      பிரிவெனும் வெம்மையாற் பிதிர்ந்து வாடியும்
               வரவெனுந் தண்மையால் வளங்கொண் டோங்கியும்
               விரிமலர்க் குழல்கனி விரும்புஞ் செய்யவாய்ப்
               பரிபுர வடியிளம் பயிரை யொத்தனள்.

        4.      நொடியொரு நாளெனும் நொடியிந் நாளெனும்
               விடிபக லேயெனும் விடியி ராவெனும்
               மடிதுயி லேயெனும் மடிக ணேயெனும்
               கொடியிடை நடைமுறை கூறுந் தன்மையோ.
 
கொச்சகம்
 
        5.      பிரிந்தார்க்கோ ரூழியாப் பிரியார்க் கொருநொடியாத்
               தெரிந்தோ தெரியாதோ செய்யுநீட் பேரிரவே
               பரிந்தார்க் குதவாது பரியார்க் கடிவருடி
               நெரிந்தார் குடிபோல நீயு நெரியாயோ.

        6.      அற்றார்க்கோ ரூழியா வறாதார்க் கொருநொடியாக்
               கற்றோகல் லாதோ கழியுநீட் பேரிரவே
               உற்றாக் குதவா துண்ணா தொளிகொள்ளா
               நிற்றார் பொருள்போல நீயுந் தொலையாயோ.

        7.      செறிந்தார்க் கிமையாச் செறியார்க்கோ ரூழியா
               அறிந்தோ வறியாதோ வாகுநீட் பேரிரவே
               முறிந்தார்க் குதவாது முறியா ரொடுகூடும்
               நிறந்தார்ப் படைபோல நீயு மழியாயோ.
-------------------------------------------------------------------------------------------
        4. இவை புணர்விலும் பிரிவிலும் நிகழ்ந்தன. புணர்வு - நொடி இந்நாள், விடிபகல், மடிதுயில். மடி - சோம்பல். மற்றவை - பிரிவு. கண்ணே மடி - கண்ணே தூங்கு. 5. ஊழி - நெடுங்காலம், வாழ்நாள். பரிந்தார் - அன்பர். நெரிதல் - கெடுதல். 7. நிறம் - இயல்பு. தார் - ஒருவகைப் படைவகுப்பு.