பக்கம் எண் :


206புலவர் குழந்தை

   
        8.      ஐதோ பெரிதோ வறியாமல் நீளிரவே
               வைதேனென் றென்னோடு வஞ்சினநீ கொள்ளாமே
               கைதோய் சிறுகுழவி போலநீ கண்ணோட்டம்
               செய்தே சிறுபோதிற் சென்றென்னைக் காப்பாயே.

        9.      பழக்க முடையார்தம் பங்காளிப் பிள்ளைகளாய்க்
               கிழக்கு வெளுக்காமுன் கீச்சுக்கீச் சென்றுகத்தி
               உழக்குநீள் வாலாட்டு மொண்காரிப் புள்ளினங்காள்
               வழக்க மொழிந்தின்று வாராத தென்கொல்லோ.

        10.     மக்களுக்குஞ் செய்தொழிற்கும் வளர்நட் பதுவாகத்
               தொக்கிருக்கும் பேரிருள்போய்த் தொலையப் பொழுதுவர
               ஒக்கிருக்கு நீடிரவோ னோடச் சிறைபுடைத்துக்
               கொக்கரக்கோ வென்றெழுந்து கோழிகாள் கூவீரோ.

        11.      வண்டூதும் பூங்குமுத மலர்காள்நீர் கூம்பீரோ
               கண்டா ரளத்தோடு கண்கவரு மாதர்முகத்
               தண்டா மரையேநீர் தாழ்செங் கழுநீரே
               வண்டார் புடைசூழ வந்து மலரீரோ.

        12.     மதியே புதியோரை மதிக்கு மதியில்லா
               மதியே யொருநீ மதியோவன் றன்றுசிறு
               மதியே செழுந்தமிழ வாய்சொல்லு மென்மொழியை
               மதியே யிலையெல் வரப்படையோ டோடுவையே.

        13.     நானிப் படிவருந்த நல்காது நாட்பூக்கும்
               வானிற் பொலியும் மதிக்குந் துணையான
               மீனப் படையீர் விலகீ ரிலையேல்செங்
               கோனப் படிவரினுங் கொட்ட மடங்கிடுமே.

        14.     வண்டார் மரைமலர மக்கள் மனங்குளிரக்
               கண்டார் கலிதாழக் கழனி களிகூர
               ஒண்டா ரிருட்படையோ டோட வெனைப்போன்றார்
               கொண்டாடச் செங்கதிரே குணவானிற் றோன்றாயோ.
-------------------------------------------------------------------------------------------
        8. ஐது - சிறிது. கண்ணோட்டம் - இரக்கம். 9. காரிப்புள் - கரிக்குருவி. 12. மதிஏ புதியோர் - மதித்தற்குரிய பெருமை பொருந்திய புதியோர் - காதலர். நீ ஒருமதியோ - நீ முழுமதி யன்று. எல் - ஞாயிறு. படை - விண்மீனினம். 13. செங்கோன் - செம்மையான தலைவன், சூரியன். வரின்நும். அப்படி - அங்கே. கொட்டம் - குறும்பு. 14. கலி - வருத்தம். ஒண்டார் - பகைவர். குணவானில் - கீழ்வானத்தில் குணமுள்ளவன் போல.