பக்கம் எண் :


222புலவர் குழந்தை

   
        44.    ஆடியே செல்லு வாரு மருந்தமிழ் பாடு வாரும்
               ஓடியே மீளு வாரு மோவெனக் கூவு வாரும்
               ஊடியே விலகு வாரு முணர்ந்துபின் கூடு வாரும்
               தேடியே காணு வாருந் தெரிவரு மாய்ச்செல் வாரே.

        45.     இன்னண மவர்கள் செல்ல விராவண னியல்பின் முன்னர்க்
               கண்ணினாற் கருத்தைக் கவ்விக் காதலைக் கொடுத்தீந் தாள்பால்
               எண்ணமுஞ் செயலு மெல்லா மேகெனச் செலவி டுத்தே
               பண்ணியே வைத்த செம்பொற் பாவைபோற் களிற்றிற் சென்றான்.

        46.     குன்றம்பின் னாகக் குன்றக் கொடிவழிச் சார னீங்கிச்
               சென்றுசான் றோர்க ளுள்ளச் செறிவினிற் றிகழ்ந்து யர்ந்த
               குன்றன மாடக் கோயிற் கொடியது வருக வென்ன
               மன்றல முரச மார்க்கும் மணிநக ரதனைக் கண்டார்.

        47.     கண்டது நங்கை கோலங் காணுவா னுள்ள மீர்ப்பக்
               கண்டெனு மொழியார் தங்கள் கணவரைக் கொத்தித் தின்று
               கொடுசென் மின்க ளென்று கொடித்தெரு வதனைச் சென்று
               கண்டனர் முல்லைக் கோனுங் கண்டுவந் தெதிர்கொண் டானே.

        48.     மாலையுங் கனியு மேனை மங்கலப் பொருள்க ளேந்தி
               மாலையி னுடங்கு நல்லார் வரத்தமிழ் மக்கள் சூழ
               மாலையில் வேலான் வந்து வருகென மணம கற்கு
               மாலைவேய்ந் தெதிர்கொண் டம்பொன் மணித்தெரு வதனிற் சென்றார்.

        49.     மின்னென விளக்கந் தோன்ற விசும்பெனக் கொடிகள் தோன்றப்
               பொன்னென முத்த மாலை பொருந்தநாற் புறமுந் தொங்கத்
               தன்னென வுயர்ந்து நீண்ட தவளவெண் குடைகள் வானிற்
               றுன்னுபன் னூறு திங்கள் தோன்றின போலத் தோன்றும்.

        50.     கொல்லியந் தேனை யெள்ளிக் குளிர்ந்துமெல் லென்ற தான
               சொல்லியர் பேச யாழும் சுவையழிந் தலறு மென்னில்
               பல்லிய மவர்கள் பாடும் பாட்டினுக் கிடைமு ழங்கல்
               வல்லியின் மணத்தைக் காண வாவெனக் கூவல் போலும்.
-------------------------------------------------------------------------------------------
        48. மால் - மிக. அயில் - கூர்மை; ஐயில் எனத் திரிந்தது. 49. முத்து மாலை - நிலவுக்குவமை.