பக்கம் எண் :


224புலவர் குழந்தை

   
        58.    இன்னண மிவர்க ளாக வினியகண் காட்சி நல்கி
               மன்னவர் மன்ன னான மணமகன் குன்றி னின்று
               துன்னரி யிழிதல் போலத் தோலிழீஇ விடுதி புக்கான்
               மன்னனு முவகை பொங்க மணவிருந் தாற்றி னானே.

        59.     ஒளிமிகு மணியின் கண்மா சோடிடக் கழுவு மாபோல்
               அளிமுரல் குழலி னாளை யருமண நன்னீ ராட்டி
               வெளியபஞ் சாடை யாலே மெல்லெனத் துவட்டிப் பின்னர்
               நளிகருங் குழற்குத் தூய நறும்புகை யூட்டி னாரே.

        60.     அல்லியை மறைக்கும் புல்லி யதற்கழ கென்னு மாபோல்
               வல்லியி னழகை முற்றும் மறைப்பதை யெண்ணா தின்பச்
               சொல்லியர் சுமக்க மாட்டாச் சுடர்மணிக் கலன்கள் பூட்டி
               எல்லியை யொளிசெய் வார்போ லெழிலினுக் கெழில்செய் தாரே.

        61.     புதியவால் மதியம் போலப் புரிகருங் குழலை வாரி
               முதுகிடைப் படிந்து லாவ முருக்கித ழொருத்தி பின்னி
               மதியெனில் மறுவெங் கென்று மயங்குவ ரென்னக் கண்டார்
               புதியவம் மதியின் மீது பொற்புறப் பொட்டு மிட்டாள்.

        62.     ஒருங்குயி ருண்ண வாளு மொள்ளிலை யொளிர்கொல் வேலும்
               பெருங்கொலை நஞ்ச மூட்டிப் பிடித்தமைக் கண்க ளான
               வரும்பகை கெடத்தற் காப்பா மருங்குறு துணைமை யாகக்
               கருங்குழ லொருத்தி வள்ளைக் காதிடை மணித்தோ டிட்டாள்.

        63.     துன்னிய மயிரின் கற்றை யொடுமலர்ச் சுமைபொ றாது
               இன்னலுற் றழுங்கு மென்ன விலகுபூண் பிடித்தாற் போலக்
               கன்னியின் கமுகு போன்ற கழுத்திடைத் திருத்த மாகப்
               பொன்னடர் வல்லி தம்மைப் புனைந்தன ளொருபொற் பாவை.

        64.     கன்னிகை கரும்பைத் தின்று களவுசெய் ததனுக் காகப்
               பொன்வளை விலங்கு பூட்டிப் பொருந்திய காப்பு மிட்டுத்
               துன்னிய சுவைகொள் வாயிற் றுருத்திய வுடந்தைக் காக
               மின்னிய பவளத் துண்டை விரலிலிட் டாளோர் பூவை.
-------------------------------------------------------------------------------------------
        59. நளி - செறிவு. 60. அல்லி - பூவின் அகவிதழ். புல்லி - புறவிதழ். எல்லி - சூரியன். 63. கற்றை - திரள். அடர் - தகடு; இது, தகட்டு வடிவான கழுத்தணி. வல்லி - சங்கலி, கொடி. 64. இது, சிலேடை கன்னிகை. கன்னிகை - பெண். கரும்பு - கைக்குவமை. காப்பு - பொற்காப்பு, காவற்கூடம். துருத்துதல் - திணித்தல். பவளத்துண்டு இதழுக்கு ஒவ்வாமையால் வாயிடம் போகாதிருக்க விரலிலிட்டாள். பவளத்துண்டு - மோதிரம்.