57. பாடிவரும் புலவர்க்கு வேண்டியவேண் டியவாங்கு பரிசி லீந்தும் பாடியவப் பாட்டுகளை யொருங்குதொகுத் தெல்லோரும் படிக்கச் செய்தும் கூடியதோர் வழியெல்லாந் தாய்மொழியாந் தமிழ்மொழியைக் குறையொன் றின்றி வாடியதோர் பயிர்வளர்க்கும் வகைவளர்த்து வருதுமென மற்றை யோரும். 58. நாங்களுமவ் வாறேதாய் மொழிவளர்த்து வருகின்றோம் நற்றா யன்ன ஓங்குபுகழ் நாவலர்க்கு மனமுவப்பப் பொருள்கொடுத்து முயர்வு செய்தும் பாங்குடைய செவிலியைப்போ லெனச்சொல்லி ராவணனும் பழன மீது தேங்கிவளர் கரும்பயின்றா ரெனமகிழ்ந்து மேனின்ற செய்தி சொல்வான். 59. சீர்தூக்கின் மக்களுக்கீண் டுணவைவிடச் சிறந்ததொரு செல்வ மின்றால் நேர்பார்க்கி னவ்வுணவும் நீராலே யமையுமதால் நிலந்தாழ் பக்கம் நீர்தேக்கி நிலந்திருத்திப் பயிர்விளைத்துப் பசிப்பிணியை நிலவா தோட்டல் பார்காக்கும் வேந்தருக்கு முதற்கடமை யாகுமெனப் பழநூல் சாற்றும். 60. தாளாண்மை யொடுநாளுஞ் சலியாம லருளுருவந் தாங்கிப் பாங்கின் நாளாண்மை யொடுநடக்க மக்கள்பசிப் பிணியின்றி நலமாய் வாழ வேளாண்மை யொடுவருமூ வினம்போற்றி யுலகோம்பும் வேளா ளர்க்குத் தோளாண்மை யொடுநிலங்காப் போர்காவற் றுணைவரெனத் தொன்னூல் கூறும். ------------------------------------------------------------------------------------------- 60. தாளாண்மை - விடாமுயற்சி. நாள் ஆண்மை யொடு நடக்க - வாழ்நாள் தடையின்றி நடைபெற. மூவினம் - ஆடு, மாடு, எருமை. | |
|
|