14. மதியமும் வெண்ணிற மலரின் றோற்றங்கண் டிதுவென நம்முட னிகலிப் போரிடப் புதியவோர் பெரும்படை போந்த தென்றுளம் பதைபதைத் தெழுந்துதன் படையை நோக்குமால். 15. முடித்திடு வேமென முனைந்து வெம்புலி அடித்திட வரவெதி ரழன்றி யானைகள் பிடிக்குலம் வெருவுறப் பிளிறு மோசைகேட் டிடிக்குல முறுமியே யிரியல் போகுமே. 16. கழையொடு பிறமரங் கலித்து வானுறத் தழையொடு மலரிணர் ததைந்து நுண்கதிர் நுழைதரு புழையற நுணங்கு காட்டினை மழையென மின்னினம் மருவி வாழுமே. 17. மடலொடு தழையிலை மலரும் பொங்கரும் இடைவெளி யின்றியே யிருண்டு கம்மென அடர்தர வங்குமிங் கசையுங் காட்டினைக் கடலென முகிலினங் கவிந்து வாழுமே. 18. துன்னிய விலைமரந் துதைந்த காட்டினை மன்னிய புயலென மருவி யாங்குறும் பன்னிறப் பூக்களைப் பகையென் றெண்ணியே வெந்நிடு வானவில் வெருவி யோடுமே. 19. கோவையொண் கனிகளைக் கொத்துங் கிள்ளைகள் ஓவியஞ் சுவைகெடு முருவு மோங்குபொற் பாவையு மிகழ்வுறும் பண்பு மேகலைக் கோவைய ரிதலிடைக் கொஞ்சல் போலுமே. 20. நீடிய பூஞ்சினை நிமிர்ந்து கைக்கொடு கோடுயர் களிறுகள் குன்ற மேற்செலல் மாடமீ துயர்த்திட வண்கை யாடவர் ஏடணி கொடிபிடித் தேறல் போலுமே. ------------------------------------------------------------------------------------------- 14. இகலி - பகை கொண்டு. 15. இரியல்போகும் - அஞ்சியோடும். 16. கலித்து - எழுச்சியுற்று. புழை - துளை. நுணங்குதல் - செறிதல். 17. மடல் - மூங்கில் முதலியவற்றின் இலை. பொங்கர் - கொம்பு. 18. வெந்நிடு - முதுகிட்டு, தோற்று. 19. பண்பு - அழகும், ஒளியும். | |
|
|