21. பகுத்து மக்கட் படைத்த படைப்பினன் முகத்து மார்புந் தொடையு முதலினும் வகுத்த நால்வரும் வந்தன ரென்றும்பின் தொகுத்த நால்வருந் தோய்கலப் பைந்தென்பர். 22. மேல்வ குப்பினர் கீழ்கொளல் மேவுங்கீழ்ப் பால்வ குப்பினர் மேல்கொளல் பாவமென் றேல்வ குப்பிதே லாவகுப் பீதென நூல்வ குத்துக் கொடுமைசெய் நொய்யவர். 23. கடையி னத்தின ரோடு கலப்பினர் அடிமை பெற்றவ ராகையி னாலவர் முடிமை பெற்ற முதலவர் மூவருக் கடிமை யுற்றவர் கற்றலு மற்றவர். 24. ஒட்டி யோரினத் துற்ற வுரியரை எட்டி நில்லென் றிகழ்ந்தவர் வாழ்வினை மட்டந் தட்டி மதிப்பொடு சூத்திரப் பட்டங் கட்டிப் பழித்திடு பாவிகள். 25. கடமை யற்றக் கடைக்குல மக்களை வடிமை விற்றுயிர் வாழ்பணிப் பெண்பெறும் அடிமை மக்க ளெனச்சொல வன்னரும் சுடுமை யற்றத் தொழும்பர்க ளாயினர். 26. ஒருவர் சும்மா விருந்துண் டுடுப்பவர் இருவர் காப்பவர் மூவ ரிரும்பொருள் தருவ ரீட்டித் தகுந்தொண் டதுசெய்து வருவர் நால்வரென் றாக்கிய வன்கணர். 27. மூத்த ராய முதலவர் மூவர்க்கும் பூத்த வன்பிற் பொறாமைய தின்றியே பாத்து நாளும் பணிவிடை செய்தலே சூத்தி ரர்தொழி லாமெனுஞ் சூழ்ச்சியர். ------------------------------------------------------------------------------------------- 21. முதல் - அடி. 26. ஒருவர் முதலியன முறையே ஒன்றாங் குலம், இரண்டாங்குலம் என்றாம். (பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திர) கலப்புக் குலத்தையும் நாலாவதுடன் கொள்க. 27. பூத்த - மிக்க. பாத்து - பகுத்து. | |
|
|