28. கூலி யின்றியுஞ் சூத்திரக் கும்பலை வேலை வாங்கலாம் வேதிய ரேனெனில் வேலை செய்திட வேதியர்க் கேயிவர் ஞால மீது பிறந்தனர் நாயனார். 29. முன்ன ராமுயர் மூவரைச் சூத்திரக் கன்னி கூடல் கடமையே யாகுமாம் பின்னர் முன்னவர் பெண்களைக் கூடிடில் அன்ன ரைக்கொலை செய்தலே யாவதாம். 30. இல்லை விட்டகன் றேகி வலிதெனைப் புல்லு மென்ற முதற்குலப் பூவையைப் புல்லுஞ் சூத்திரன் பொன்றிட வாண்குறி கொல்லு கென்னுங் கொடுந்தொழி லாளரே. 31. வலிய வேதியர் மக்களி லோருயிர் குலைய வேகொலைக் குற்றமே செய்யினும் செலவுக் கீந்தய லூரிற் செலுத்துதல் தலையை மொட்டை யடித்தலே சாலுமாம். 32. ஆய்த லின்றியோர் சூத்திர னைக்கொலை வேதி யன்செயில் வேத மறிந்தவோர் வேதி யன்கொள வெண்ணிற வாக்கள்பத் தீத லேயதற் கேற்ற வொறுக்கையாம். 33. முதற்கு லத்தர் முனிவுறச் செய்குறை எதற்குஞ் சூத்திரர்க் கீவிரக் கின்றியே பதைக்க வுள்ளம் படுவன் கொலையொடு கொதிக்க வின்னுயிர் கோறலே தக்கதாம். 34. மாந்தர் தம்மை வகையுறக் காத்திடும் வேந்த னன்றியவ் வேதியர் தாங்களே வாய்ந்த குற்ற வழக்கினைத் தீர்த்திடல் ஆய்ந்த நூன்முறை யாமெனு மல்லவர். 35. சூத்தி ரர்பொருள் சேர்க்கிற் றொழுதகு மூத்தர் துன்பத்துள் மூழ்குவ ராதலான் பூத்த வப்பொருள் பூசுரர் கொண்டுமே பாத்து வாழுதல் பண்பெனும் பாவிகள். | |
|
|