பக்கம் எண் :


268புலவர் குழந்தை

   
        54.    ஆக்க வும்பின் னழிக்கவும் வல்லதா
              வீக்க தீமொழி மேவுதம் மேலவர்
              நீக்க மின்றி நிலைத்தவ ரென்றுமுத்
              தீக்கை யாளரென் றும்புகல் தீக்கையர்.

        55.    தேவ ரோடுமத் தேவர்க்குந் தேவராம்
              மூவ ரோடு முனிவர் தொடர்புகொண்
              டாவ தாக்கி யவரிங் கிவரங்கும்
              போவ ரென்றும் புளுகும் புரட்டர்கள்.

        56.    தேவர் தங்கள் திருவிறக் கமென்றும்
              தேவ ரோடு திருமண முண்டென்றும்
              மாவும் புள்ளு மரபென்று மற்றுயிர்
              யாவும் பேசின வென்னு மளப்பர்கள்.

        57.    தாய்க்கு லத்தினர் தம்மையே தேவர்க
              ளாக்கி மக்கள்செய் யாதன செய்ததா
              வாய்க்கு வந்த படியெலா மக்களை
              ஏய்க்க வேபொய் யியம்புமே மாற்றினர்.

        58.    இயலி லாதவை யெண்ணில தம்மவர்
              செயல வாக்கித் தெறித்துப் பழங்கதை
              பயல வாக்கிப் பகுத்தறி வோட்டியே
              மயல வாக்கி மதிப்படை வஞ்சகர்.

        59.    இன்னு மென்னென வோவள வின்றியே
              முன்னுக் குப்பின் முரண்படச் சொல்லியே
              அன்ன யாவுந்தெய் வத்தொடர் பானதம்
              முன்ன வர்செய லென்றிடு மோசகர்.

        60.    ஒன்று தன்மதிப் புற்ற நொடியிலே
              பொன்ற நின்று புளுகு புரட்டுகள்
              ஒன்றி லாதெடுத் தோதிட முற்படின்
              சென்ற தேயொரு தீயநூ லாகுமே.
-------------------------------------------------------------------------------------------
        54. வீக்க - விரைந்து பற்றவல்ல. தீமொழி - சாபம். முத்தீ - ஆகவநீயம், காருகபத்தியம், தென்றிசையங்கி. தீக்கையர் - தீய ஒழுக்க முடையவர். 56. திருவிறக்கம் - அவதாரம். 57. தாய்க்குலத்தினர் - தம்மவர். 58. இயல் இலாதவை - தகுதியற்றவை. மக்களால் செய்ய முடியாதவை. பழங்கதை - புராணம். மயல - மயக்கமுடைமை. 60. பொன்ற நின்ற - பொன்றும். தீயநூல் - அச்செயலெல்லாம் தமிழர்க்குத் தீமையே யாதலின் தீமையைக் கூறும் நூல்.