பக்கம் எண் :


இராவண காவியம் 271

   
        77.    செய்யிய செய்து செழுந்தமிழ் மக்கள்
              உய்யிய செய்குந ரோடு கலந்து
              வய்யிய தாலவ் வடவர்கள் தாமும்
              அய்யர்க ளென்ன அழைக்கவும் பெற்றார்.

        78.    அருந்தியே நல்விருந் தாய்தமிழ் கற்றும்
              பொருந்தவே யாரியப் பொய்க்கதை சொற்றும்
              இருந்தன ரிப்படி யேபல ரின்னும்
              பொருந்தவே வந்து புதுக்குடி யானார்.

        79.    மூப்பின ராய முதியரே யன்றி
              ஏர்ப்படு மேனி யிளையரும் போந்து
              சீர்ப்படு காதலர் சீர்ப்பட வாற்றும்
              பார்ப்பன வேலையும் பார்த்தனர் சில்லோர்.

        80.    நீர்ப்படு காதல் நெறிப்பட வுள்ளம்
              நார்ப்பட வாழ்வு நடத்துனர் கட்குப்
              பார்ப்பன நற்றொழில் பார்த்ததி னாலே
              பார்ப்பன ரென்று பகர்ந்திட லானார்.

        81.    இப்பெய ரன்னா ரினப்பெய ராயும்
              மெய்ப்புறம் ஐயர் விளிப்பெய ராயும்
              ஒப்புறத் தாங்கி யுயர்தமிழ் நாட்டில்
              வைப்பென வின்புறீஇ வாழ்ந்திட லானார்.

        82.    இன்னண மாயவ ரெய்தியே மேன்மை
              தன்னல மல்லது தாமறி கில்லார்
              நன்னல மாக நறுந்தமிழ் நாட்டில்
              பன்னல மெய்திப் பயனுற வாழ்ந்தார்.

        83.    இங்ஙனம் நாள்பல வேகிட வேக
              மங்கல மக்கள் மனையொடு போந்து
              கொங்கலர் கானிற் குடிசைகள் கட்டி
              இங்குமங் காக விருந்துமே வந்தார்.
-------------------------------------------------------------------------------------------
        77. உய்யிய செய்குனர் - ஐயர் அந்தணர். 80. நீர் - தன்மை. நார் - அன்பு. பார்ப்பனத்தொழில் - தொல். பொருளதிகாரம் - குழந்தையுரை, பொதுவியல் 4ஆம் சூத்திரவுரையிற் காண்க. 83. கொங்கு - மணம், தேன்.