100. ஈங்குவட வாரியர்கள் செய்ந்நன்றி கொன்றவருக் கியல்பா யுள்ள ஓங்குமிழி குணஞ்செயலால் வருகவெனக் கொண்டுவிருந் துவக்க வூட்டி நீங்கரிய வுறவினராய் நிலைத்திருக்கச் செய்ததனை நினைத்துப் பாரா தாங்குகொலை வேள்வியினால் தமிழர்குலப் பகைவர்களா யமையுங் காலை. 101. கொலைவளத்துக் குலகினிடை நடமாடு முயிர்கொல்லுங் கொடுமை வாய்ந்த புலைவளத்துக் கமைவேள்வி யதைப்போக்கித் தமிழகத்தைப் புனித மாக்க மலைவளத்துக் கிடைபொலியும் இடைவளநா டதைத்காத்து வருமூ தாட்டி கலைவளத்துக் கறிவுதருந் தாடகைப்பேர்த் தமிழரசி கருத்துட் கொண்டாள். 102 கொண்டகருத் தினைமுடிக்குங் குறிப்புடையா ளதற்குதவி கொள்ள வேண்டி உண்டுகொழுத் தாரியர்செய் புலைத்தொழிலோ டருந்தமிழர்க் குஞற்றுந் தீங்கை எண்டிசையும் பரவுதமி ழகமுழுது மொருகுடைக்கு ழினிது காக்கும் திண்டிறல்சேர் தென்னிலங்கை இராவணற்குத் தூதுவரால் தெரிவித் தாளே. 103. தென்னிலங்கை யடைந்துதமிழ்த் தூதுவர்கள் ஆரியர்செய் தீமை யெல்லாம் இன்னதென வுள்ளபடி யெடுத்துரைக்க மாமன்ன னினிது கேட்டுத் தன்னுறவுக் கிடையூறு செய்வடவர் பெருங்கொட்டந் தனைய டக்கி மன்னுதமிழ்ப் பெருமக்கள் தமையினிது காத்தருள மனத்துட் கொண்டே. | |
|
|