17. வந்தனர் குறுநில மன்ன ரோர்சிலர் தந்திலன் எனதுயர் தகுதி நோக்கியே எந்தையே முடிவினில் எளிய அன்னரும் வந்திலர் வீட்டினில் வைத்துக் காக்குனன். 18. மான்றனை யரசர்கள் வரிக்குஞ் சூழ்ச்சியில் தோன்றிய படியொரு சொத்தை வில்லினை ஊன்றினன் வளைப்பவர்க் குரிய ளாமென மான்றரு தேரினர் எவரும் வந்திலர். 19. முடிவது தெரிந்திலன் முனிவ என்குலக் கொடிபடர் கொம்பினைக் கொள்ள வல்லனோ கடிமணப் பருவமுங் கடந்து விட்டது விடியுமோ என்குலக் கொடிக்கிம் மேதினி. 20. கெடுத்தனன் ஒருபசுங் கிளியைக் கூட்டினில் அடைத்ததன் பிறப்பைவீ ணாக்கும் வீணர்போல் செடித்தலை நாய்நரி தின்ன விட்டிடா தெடுத்துவந் தருந்துயர்ச் சிறையி லிட்டனன். 21. படிப்பழி நீங்கிடும் பெரியர் பார்வையால் மிடிப்பழி நீங்கிடும் செல்வர் மேவலால் பிடிப்பழி மருங்குலென் பெண்ணி னால்வருங் குடிப்பழி நீங்கிடும் காலங் கூடுங்கொல். 22. நிலஞ்சுடுந் தீயிருள் நீக்குஞ் செங்கதிர் வலஞ்சுடுந் தீமிகு மடியு மச்சமும் நலஞ்சுடுந் தீயுள நலிவு போல்வரு குலஞ்சுடுந் தீயெழிற் குமரி யென்பரால். 23. இன்னன பலசொலி யேக்கங் கொள்ளுமா மன்னவன் நிலையினைக் கண்ட மாமுனி பொன்னவிர் பொலங்கழற் பொருவிற் றானையோய் என்னிது பலாச்சுளைக் கீக்கள் பஞ்சமோ. ------------------------------------------------------------------------------------------- 21. படி - உலகம். பிடிப்பு அழி மருங்குல் - இடை. 22. வலம் - உடல்; உளவலி. மடி - சோம்பல். 23. பொன் அவிர் - ஒளிவிளங்கும். பொலன் - பொன். | |
|
|