பக்கம் எண் :


இராவண காவியம் 307

   
       39.     மூவரு மெழுந்துபோய் முறைமை யாகவே
              தாவறு மதிமிகு சனகற் கண்டுதாம்
              மூவரும் வந்ததை மொழிய மன்னவன்
              ஏவரும் வில்லினை யெடுத்து வம்மென.

       40.     குற்றொழி லொருவன்போய்க் கொண்டு முன்னிட
              மற்றதை நோக்கியே மன்னர் மன்னவன்
              நற்றவ முனிவனை நோக்க நற்றவன்
              விற்றொழில் ராமனை விரும்பி நோக்கவே.

       41.     மிடுக்குடன் எழுந்தனன் விரைந்து வில்லினைச்
              சடக்கென எடுத்தனன் தலையைப் பற்றினன்
              துடுக்குடன் வடுப்படு தோளின் வாங்கினன்
              முடுக்குடன் வளைத்தனன் முரிந்து வீழ்ந்ததே.

       42.     உள்ளவ ரனைவரும் ஒருங்கு வாழ்த்தினர்
              அள்ளிலை வேலனும் அகம கிழ்ந்தனன்
              கள்ளநீர் முனிவனும் காளை வாழ்கென
              உள்ளுறை தோன்றவே உவந்து வாழ்த்தினான்.

       43.    தெள்ளரிக் கண்ணியிச் செய்தி கேட்டதும்
              உள்ளமும் உவகையும் உணர்வு மொன்றுற
              உள்ளுறு மாவியால் ஊது பந்துபோல்
              புள்ளுறு பொடிபடப் பொம்ம லுற்றனள்.

       44.     உன்னுவள் புதுநிலை யுவப்பள் மன்னவர்
              மன்னவன் மகனென மதிப்பள் கோமகன்
              கன்னியிந் நிலையினிற் களிப்பள் ஊர்மிளை
              தன்னிலை யவள்நிலை சார்ந்து காண்மினே.

       45.     ஊழியா யிடையில்வந் துறுத்த பாழ்ஞ்சிலை
              நாழியில் தொலைந்தது நன்மை வந்தது
              வாழியர் திருமண மக்கள் என்றுமெய்த்
              தோழியர் அவரவர் சொல்லிக் கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------
       42. கள்ளநீர் - கள்ளத்தன்மை. 43. புள் - வளையல். பொம்முதல் - பெருத்தல்