46. முடிந்தது மன்னவன் துயரம் முந்துறக் கடந்தது பருவமுங் காம நோயுடன் ஒடிந்தது கொடுஞ்சிலை ஒருத்திக் கின்றொடு விடிந்தது பொழுதெனும் மிதிலை மாநகர். 47. உரைசெயும் படியமைந் துள்ள நன்மணப் பரிசினைத் தசரதன் பாலு ரைத்திவண் வரிசையாய் விரைவினில் அழைத்து வம்மென அரசனு மமைச்சரை யயோத்தி போக்கினான். 48. மணமெனு முரையினைச் சுமந்து மன்னவன் பணியுட னொருசில பகலிற் பாங்குடன் கணியகில் சந்தனக் காடு நீந்திப்போய் அணிநக ரயோத்தியை யமைச்ச ரெய்தினார். 49. எய்தியே காவலர்க் கியம்பிக் கோயிலை எய்தியே தசரதற் கியம்ப நன்மணச் செய்தியை யவன்மகிழ் சிறந்தி யார்க்குமச் செய்தியை யுரைத்தனன் திரையில் ஆர்த்தனர். 50. முந்துற வமைச்சர்க்கு முகமன் நல்கியு வந்திட மணவிருந் தாற்றி மாண்புடன் தந்தமர் தம்மொடு தானை சூழ்தர அந்தநன் னாளிலே பயண மாயினான். 51. அலகறு பொருளுட னானு மேனவும் இலையெனா தாரியர் கொள்ள வீந்துமே குலகுரு வசிட்டனுங் குறித்த நேரத்தில் பலவிய முழங்கவே பயண மாயினான். 52. மக்களுங் குருக்களு மனைவி மார்களும் ஒக்கலு மமைச்சரு முறவும் நண்பரும் தொக்கிய வேதருந் தொடரப் போயினான் அக்கறை யோடணி யயோத்தி நீங்கியே. 53. மருதமு முல்லையும் மலையுந் தாண்டியே கருதிய படியியல் காட்சி கண்டுமே ஒருசில பகல்நடந் துரவுத் தானையான் திருநகர் மிதிலையைச் சென்று கண்டனன். | |
|
|