பக்கம் எண் :


இராவண காவியம் 323

   
        79.  சினவறை யதற்குச் சென்று தேவியுஞ் சினந்து பூண்ட
            புனையிழை களைந்து பின்னல் புலந்தலங் கோல மாக
            இனியவன் வரட்டுங் காட்டுக் கோட்டுவே னிணங்கேன் என்னும்
            அனையபல் நினைவி னோடு கிடந்தனள் அழுது கொண்டே.

        80.  அன்னவ ளிவ்வா றாக ஆவன செயப்ப ணித்தே
            மன்னவன் அரசி யில்லம் வந்துகை கேசி என்னும்
            பொன்னினைத் தேடி யாங்கோர் புகன்றிட வோடிப் பொன்னைத்
            துன்னியே கண்ணா லன்னாள் துயர்நிலை யதனைக் கண்டான்.

        81.  என்னுயிர்க் குயிர்போன் றாளே ஏனழு கின்றாய் பெண்ணே
            அன்னதை யெனக்குச் சொல்லு மழாதடி கண்ணே யஃதென்
            அன்னதைத் தருகு வேன்ற காதசெய் தேனு மென்றன்
            இன்னுயி்ர் கொடுத்தே னுந்தா னென்றுநீர் துடைத்துக் கேட்டான்.

        82.  அன்னவ னுளக்கிடக்கை யறிந்தவள் எனக்கொன் றும்மால்
            மன்னவா ஆக வேண்டும் வாய்மொழி கொடுத்தாற் சொல்வேன்
            என்னவஃ தென்ன தேவி இயம்பியென் றனைக்காப் பாற்றும்
            நன்னுதல் தவறேன் நல்ல ராமன்மே லாணை யென்றான்.

        83.  சொன்னசொற் றவர மாட்டீ ரோவெனத் துணிதி யென்ன
            மன்னவா முன்னர் மீனக் கொடியுயர் மன்ன னான
            தன்னிகர் விந்த நாட்டுச் சம்பரப் போரி லுன்றன்
            இன்னுயிர் காத்த தற்கா விரண்டுபே றளித்தீ ரன்றோ.

        84.  அன்னதைத் தருவீர் என்ற னாருயிர் விடுத்தே யேனும்
            இன்னுநீ யெதைக்கேட்ட டாலு மீகுவே னென்ன முன்னம்
            சொன்னசொற் றவற மாட்டீர் தோகைகட் டாய மில்லை
            அன்னதைத் தரம றுத்தா லாருயிர் விடுவே னென்றாள்.

        85.  அன்னமே தவற மாட்டேன் அவைகளைத் தந்தே னென்ன
            மன்னவென் மகனுக் கொன்றால் மணிமுடி சூட்ட வேண்டும்
            இன்னொரு பேற்றால் ராமன் ஏழிரண் டாண்டு கானந்
            துன்னிட வனுப்ப வேண்டும் சொன்னசொற் றவறே லென்றாள்.