பக்கம் எண் :


332புலவர் குழந்தை

   
      143.   கொடியளே சீதை கானங் குறுகுதல் தகாது ராமன்
            முடிபுனைந் தரசா ளட்டும் மூத்தவ னிருக்கத் தம்பி
            முடிபுனைந் தரச னாதல் முறைமையோ இவர்கள் போனால்
            நடுவிகந் தவளே போவோம் நாங்களு மெனக்கை கேசி,

      144.   என்மக னுங்கட் கெல்லாம் என்னிடர் செய்தான் மூத்தாள்
            தன்மகன் என்ன நன்மை தான்செய்தான் அறிவின் மூத்தீர்
            மன்மகன் தாளத் துக்கு மத்தளம் போட்டுக் கொண்டென்
            பொன்மகன் கெடவண் ணாந்தீர் போதுநும் வாயை மூடும்.

      145.   ஆவரும் பழிக்கஞ் சாதீர் என்மகன் அரசை வவ்வ
            யாவரு முளவ ராகி யானையுண் விளம்போ லானீர்
            ஏவரு மரபுக் கொவ்வா இழிவையுந் தேடிக் கொண்டீர்
            ஓவருங் கொடிய துன்ப மொழிவது நலனே யென்றாள்.

      146.   என்னநீ செய்தாய் சீதே எனத்தச ரதன்பு லம்ப
            அன்னையைப் பகைவர் கையிற் கொடுத்திடா தருள்வீ ரெந்தாய்
            என்னவே ராமன் வேண்டச் சுமந்திரா இனிய தேரில்
            இன்னரை யேற்றிச் செல்கென் றியம்பியே மன்னர் மன்னன்.

      147.   பொன்னணி கலன்க ளீந்தான் புனைந்தனள் சீதை ராமன்
            என்னென குற்றங் கள்செய் திருப்பினும் பொறுப்பீ ரென்று
            தன்னருந் தந்தை தாயர் தமைப்பணிந் தெழுந்து தேரில்
            அன்னவ ரேறக் கண்டோ ரனைவருங் கதறி னார்கள்.

      148.   தெள்ளிய மணிபொன் செய்த திருமுடி புனைந்து செம்மல்
            கள்ளவிழ் குழலார் கண்டு களித்திடத் தேவி யோடு
            வள்ளிய தெருவி னூடு வலம்வரற் கமைந்த வத்தேர்
            பொள்ளென நெடிய கானம் போவதற் கமைந்த தம்மா.

      149.   தன்னிகர் மைந்தா ராமன் சீதையே தந்தை தாயர்
            அன்னர்சொற் படிந டப்பாய் எனச்சுமத் திரையு மம்மா
            சொன்னசொற் றட்டே னென்று தொழுதிலக் குவனு மேற
            மன்னவன் றொடரத் தேருஞ் சென்றது வாயில் விட்டே.
-------------------------------------------------------------------------------------------
      145. ஆ - பழிப்பு. ஏ - பெருமை. ஓவு அரும் - ஒழியாத. 148. செம்மல் தேவியோடு வலம் வரற்கு.