157. பாவிகை கேசி யாலே பழிபெற வெம்மை விட்டுத் தாவரு கான மாளத் தானடைந் தீரோ வென்று தேவிய ரழுது கொண்டு செல்வமே வருவீ ரென்று கூவியே தொடர்ந்து செல்லக் கொடித்தெரு வதனை நீங்கி, 158. பொங்கிய வுறவு மூரும் புலம்பியே நிற்க விட்டே அங்கவ ரிருவ ரோடும் ஆரியக் கும்ப லோடும் மங்குல்தோய் மாட நீடு மாநகர் நீங்கிச் சென்று கங்குலிற் றமசை யாற்றங் கரையினிற் றங்கி னானே. 159. தங்கிமின் னொளியாள் மேனி தடவியே சனகன் பெற்ற மங்கையுன் னடியைத் தீண்டப் பெற்றவிம் மண்ணுக் கின்பம் நுங்கையர் களுக்குத் துன்பம் நூறுபங் கலவோ வென்ன எங்களுக் கதினுந் துன்ப மிரண்டென மறையின் வல்லோர். 160. ஐயன்மீர் என்மேல் வைத்த அன்பினைப் பரதன் மீது வையுங்க ளென்ன நல்லோய் வஞ்சகி மகனுக் கெம்மைக் கையடை யாக்கிச் செல்லல் கடமையோ என்னப் பின்னோன் துய்யநற் குணங்க ளுள்ளான் றுயர்தவிர்ந் திருப்பீ ரென்றான். 161. ஈங்கவர் தமக்கு நல்ல னென்னுநம் பிக்கை காட்டத் தூங்கினர் விடிந்து மன்னார் தூங்குதல் கண்டி ராமன் பாங்கனை யெழுப்பித் தேரைப் பண்ணியங் கிருந்து சென்றான் ஆங்கவ ரெழுந்து காணா தயோத்தியை யடைந்தா ரம்மா. 162. அடையவே ராம னின்றி ஆரியப் பெண்டீ ரெல்லாம் வடிவழ கோனைக் கூட்டி வரத்திற மில்லா வுங்கட் குடையபெண் டாட்டி வேறா ஒருதுளி யாண்மை யில்லீர் மடிகுவோ மவனைக் காணா மலர்விழி வருந்த வாழோம். 163. பாட்டளி முரலுங் கூந்தற் பைங்கிளி யோடு கூடி ஈட்டருங் காமப் பள்ளி யிடைவிளை யாடும் போது தீட்டரு மேனி மைந்தன் திருமுகச் செவ்வி தன்னைக் காட்டினி லுள்ளா ரன்றோ களிப்பர்கண் டென்று நொந்தார். ------------------------------------------------------------------------------------------- 157. தாவரு - கடத்தற் கரிய. 158. மங்குல் - முகில். கங்குல் - இரவு 160. கையடை ஆக்கி - ஒப்படைத்து. 163. முரலும் - ஒலிக்கும். செவ்வி - அழகு. | |
|
|