பக்கம் எண் :


இராவண காவியம் 345

   
          3.  அங்கு நின்று மகன்றிட வெண்ணிட
             தங்கி வாழும் முனிவர் தலைவனை
             இங்கு நீவிர் வெருவுற லென்னென
             உங்க ளால்வெரு வுற்றன மென்னெனில்.

          4.  இலங்கை வாழு மிராவணன் ஆணையிற்
             பொலங்க ழற்கரன் என்னும் புலியனான்
             விலங்கு மாண்மைவேல் வீரர்கள் தம்மொடு
             வலங்கொள் விந்தகம் காத்து வருகிறான்.

          5.  ஈங்கு நீங்கள் இருப்பதைக் கண்டவன்
             ஓங்கு வேள்வித் துணையுடை யோரென
             ஆங்கு நாங்கள் அடைய விடாதிகல்
             வாங்கு வீரரைக் காவலாய் வைத்துளான்.

          6.  இடிநி கர்த்தவர் இவ்வுல கத்தினை
             ஒருநொ டிக்கு ளொழித்துரு வங்கெடப்
             பொடிப டுத்தும் பொருவலி மிக்கவர்
             கடுக டுத்திடிற் காற்றையு மெற்றுவர்.

          7.  ஆத லாலிங் ககன்று தமிழகம்
             போது வீரெனிற் போதிய சூழ்ச்சியைப்
             பாது காத்தெமைப் பாதுகாத் தீமென
             மாத வனன்கு வாயுற வாழ்த்தினன்.

          8.  என்று கூறி யினத்துட னாயிடை
             நின்று சேர்வுற நீங்கியவ் வாரியர்
             சென்ற பின்னர்ச் செறிந்த வுயிர்களைக்
             கொன்று தின்றக் குறிய ரிருந்தனர்.

          9.  ஓவக் கூடத் துறைந்து பலபகல்
             பாவை யோடு பகலிர வின்றியே
             மேவி யின்ப நுகர்ந்துபின் வேறிடம்
             போவ தேநல மென்றவர் போயினார்.

          10. அங்க கன்றுபோய் அத்திரி தன்னிலை
             தங்க வன்மனை தையற் கணிகலன்
             அங்க லவைக ளோடுபட் டாடையும்
             மங்கை கொள்கென வான்பரி சீந்தனள்.
-------------------------------------------------------------------------------------------
          4. விலங்குதல் - வெல்லுதல். 5. இகல் வாங்கு - பகையை ஏற்றுக் கொள்கின்ற. 10. அம் கலவை - நல்ல கலவைச் சந்தனம்.