பக்கம் எண் :


இராவண காவியம் 359

   
        43.  சென்று நில்லடி என்றிடத் தேவியுந் திரும்பி
            நின்று பார்த்தனள் தடுத்தனன் தடுப்பவன் நீயார்
            என்ற தட்டியே கேட்கவே சடக்கென விழிஞன்
            மன்ற லங்குழல் பற்றியே வயிற்றினி லுதைத்தே,

        44.  உண்ட மைவிழி தனைநிலந் தள்ளிவா ளுருவக்
            கண்டு கோவெனப் புலியின்வாய் மானெனக் கதறிக்
            கொண்டு மேலெழ முனைந்துமே திமிறிடக் கொடியோன்
            அண்டி வன்னிலத் துடலுரிந் திடவிழுத் தந்தோ,

        45.  இரும்பு போன்றநெஞ் சிழிதகை தேவியி னிணைக்கோங்
            கரும்பு தோன்றநா ணின்றிமே லாடையை யவிழ்த்துக்
            கரும்பு போன்றமென் கைகளைப் பின்னுறக் கட்டி
            நரம்பு தோன்றிட இழுத்திழி காலைமேல் நாட்டி,

        46.  செருக்கெ டுத்திவண் திரிதரு மிளநலச் சிறுக்கி
            உருக்கு லைத்துன தழகினை யப்புறடித் தோட்டிச்
            சரிப்ப டுத்துவேன் பாரென வேதறு தலையும்
            பருக்கெ னத்திக ழுறுப்பினைத் தீக்கையாற் பற்ற,

        47.  தீக்கைப் பற்றுவிட் டோடிட வெழுந்தமிழ்த் திருவைத்
            தூக்கித் தூக்கிப்போட் டுதைத்துதைத் துயிர்துடி துடிக்க
            மூக்குங் காதுமட் டோமுலைக் கண்களா முகையும்
            போக்கி ஆயிடை நின்றுமே சென்றனன் பொல்லான்.

        48.  துன்று பூங்குமிழ் வள்ளைகோங் கரும்பினைத் துமித்தே
            கொன்றி லாதுசென் றண்ணனைக் கூடினன் கொடியும்
            கன்றி யோவென நிலத்திடைப் புரண்டுமே கதற
            மன்ற லங்குழல் மாதர்கேட் டோடியே வந்து,

        49.  குருதி சோரிடுஞ் சினைக்குறை யோடுபூங் கொம்பை
            மருத மேவிய புனமயி லாமென மண்ணிற்
            சொரியுஞ் சேற்றிடைக் கண்டவர் மனந்துடி துடித்துக்
            கரிய வென்னெனத் தேவியு முற்றது கழற,
-------------------------------------------------------------------------------------------
        47. முகை - கோங்கரும்பு, முலைக்கண். 48. குமிழ் - மூக்கு. வள்ளை - காது. 49. சோரிடும் - ஒழுகும். மருதம் - வயல். சொரியுஞ் சேறு - குருதி யொழுக நனையுஞ்சேறு. கரிய - கொடுஞ்செயல், வன்கொலை.