பக்கம் எண் :


362புலவர் குழந்தை

   
        65. எள்ளத் தனையுமுளத் தீவிரக்க மில்லாமற்
           கள்ளத் தனமாகக் கானத் திடையொருபெண்
           துள்ளித் துடிக்கத் துடிக்க வுறுப்பறுத்த
           எள்ளத் தகுபாவீ யிதுதான் அருந்திறலோ.

        66. வாதுக்கு வாராத மங்கையை வன்கொலைசெய்
           ஏதுக்கும் பற்றா விழிஞா பிறனொருவன்
           மாதுக் கவாவும் மடையா பொருளறியாக்
           காதற் கயவா கடையாபாழ்ங் காமுகனே.

        67. ஒப்பாரோ டல்லா லொருபெண் டனித்தவிடத்
           திப்பாரி லாரே யெதிர்ப்ப ரெதிர்த்தாலும்
           இப்பாழ்ஞ் செயல்புரிவார் யாரே யிழிதகவில்
           ஒப்பா ருனையாரோ ஓகொடிய பாழ்மகனே.

        68. வம்புக்கு வந்தாளோ மாபாவீ யுன்கொடிய
           அம்புக்கு வேறிடமின் றாயதோ வன்றியுனை
           நம்பிக்கை காட்டி நலங்கொண் டகன்றாளோ
           கம்புக் கதிரிருக்கக் காழி பிளந்தாயே.

        69. பெருமை யுடைத்தமிழர் பெண்மக் களையகற்றிப்
           பொருவ ரொருநாட்டிற் போயறநூற் றப்பாதே
           ஒருபெண் டனித்துலவ வுற்றுச் சினைசிதைத்தல்
           அரிய முனிவோர்செய் யாரிய நூன்முறையோ.

        70. நாணிலீ பெண்ணென்றால் நச்சரவி னோடெதிரிற்
           காணுங் கொடுவிலங்குங் கண்ணோடுங் காமுகநீ
           ஆணெனப்பேர் பூண்டு மருளன் பிலாதபடு
           வீணனையுன் றாயையோ மெய்வருந்தி யேன்பெற்றாள்.

        71. அந்தோ வினியெவ்வா றாற்றுகே மெம்மன்னாய்
           நந்தா வொளிவிளக்கு நந்திற்றே நன்கலனார்
           சிந்தா மணியந்தோ சிந்திற்றே யென்செய்கேம்
           வந்தேறி கையம்பின் வாய்க்கிரை யாயினையே.

        72. என்றின் னனபலவா றேங்கி யிருங்கானிற்
           சென்றுமே பச்சிலைகள் தேடிக் கொடுவந்து
           துன்று துகிலாற் றுடைத்தவ் விடைபொத்தி
           மன்றலங் கார்குழலை வாரி முடித்தார்கள்.
-------------------------------------------------------------------------------------------
        68. அம்பு - வாள். காழி - கதிரின் காம்பு.