பக்கம் எண் :


இராவண காவியம் 377

   
        23.  ஆயினுமுன் பேச்சிலென கம்பதறு கின்ற
            தேயினிய காவலனுக் கெங்கிருந்து வந்தாய்
            நீயுமொரு பெண்ணா நிலப்பொறைய ளன்றோ
            தீயசொலி வீண்பழி சுமத்துவது தீதே.

        24.  இன்னன பலசொல விராமனை யலாது
            கன்னியா னொருவரையுங் கைதொடுவ னோதான்
            இன்னுயிர் விடுக்கிறே னெனவயி றலைத்தே
            என்னையிது வோவென வினைந்துமே யழுதாள்.

        25.  அஞ்சியிளை யோனவளை யானவரை தேற்ற
            வஞ்சக வினுஞ்சிறிதிவ் வாறென திடத்தே
            எஞ்சியே யிருக்கலாமென் றெண்ணுதியோ வென்ன
            வஞ்சியிதழ் மூடவினை மற்றவனும் போனான்.

        26.  மற்றவ னகன்றது மணித்தமிழ் மறவர்
            அற்றமிது வாமென வகத்தெளிவு கொண்டு
            வெற்றிவிறல் வாகையொடு வெட்சியுற வாடப்
            பொற்றொடி வெருக்கொள பொருக்கெனவ ணுற்றார்.

        27.  அன்னவர் தமைக்கணுறி யஞ்சியவள் நெஞ்சம்
            இன்னதிது செய்வதென வேதுமறி யாமல்
            என்னவ ரகத்தினி லிலாதவிது போது
            துன்னுதற காததெனுஞ் சொன்முடியு முன்னே,

        28.  தூக்கிவிரை வாயவர் சுருக்கென வகன்று
            காக்குந ரிலாதுதனி கண்டகனி மாவை
            மாக்கடுவ னென்றுகொடு மந்திபுடை சூழ
            ஊக்கமொடு செல்லுதலை யொத்தவர்கள் சென்றார்.

        29.  மாற்றிய துப்பினொடு வண்டமிழ் மறவர்
            காற்றினு மனத்தினுங் கடிதுநனி சென்றே
            ஆற்றல்மிகு மண்ணலி னகத்துவகை பொங்க
            மாற்றினுயர் தேரின்மிசை மங்கையை யிருத்த,
-------------------------------------------------------------------------------------------
        23. காவலன் - சீதையின் தந்தை. பொறை - சுமை. 25. எஞ்சி - தங்கி. இனை - வருந்தி. 26. அற்றம் - ஏற்றவேளை. வாகையொடு வெட்சி உறவாட - வெற்றியோடு எடுத்துச் செல்ல. 28. கனிமா - மாங்கனி, கடுவன் - ஆண்குரங்கு.