44. அன்றியு நானோ ரயலவன் மனைவி அரசிழந் தரியவெங் கானந் துன்றினம் பொல்லாந் துறவிகள் செய்த சூழ்ச்சியாற் றமிழக மதனை ஒன்றினஞ் சிறியே மொளிக்கதிர் வேலோய் உள்ளதை யுரைத்தன னென்னைக் கன்றிடச் சிறையில் வைப்பதாற் பயனென் காத்தருள் கெனவடி பணிந்தாள். 45. என்றவள் பணியக் கண்டிரா வணனும் எரிசினந் தணிந்துபெண் பாவாய் கன்றியே கதறி யழுதிட வேண்டா காரிகைப் பெண்ணுல கதனுக் கென்றுமே துன்பஞ் செய்வது தமிழர்க் கியல்பல செய்தது மில்லை அன்றியு மேபெண் ணடிமையைத் தமிழ்நா டறிந்தது மிலையறி யானால். 46. முன்னமென் பாட்டி தனித்துமே யிருக்க முறையிலா தையகோ கொன்றான் பின்னரு மென்னோ டுடன்பிறந் தாளைப் பெண்ணென வென்பிறப் பென்ன உன்னியே பாரா வன்கொலை புரிந்தே ஒழித்தனன் பாவியுன் கணவன் அன்னவன் புரிந்த பெண்கொலை யுனக்கும் அம்மணீ மானக்கே டலவோ. 47. நெஞ்சிடை யீர மருளொடீ விரக்கம் நேர்மையென் பதுசிறி தில்லா வஞ்சகன் புல்லன் பெண்கொலை யதுவும் வன்கொலை புரியுமா பாவி நஞ்சினுங் கொடிய கயவனை யடைய நயக்குதல் வியப்பினில் வியப்பே வஞ்சியே யுனைநான் வஞ்சியேன் றமிழர் வழக்கமும் பழக்கமு மன்றே. | |
|
|