பக்கம் எண் :


384புலவர் குழந்தை

   
       2.  வாளினும் வேலினும் மறவர் தாக்கியே
          கேளல கொடியவெங் கிளையைக் கொன்றநீ
          மீளலை யினியுயிர் மீட்டுக் கொண்டென
          ஆளிமொய்ம் புடையனு மம்பு தொட்டனன்.

       3.  வெருவுறப் பெண்கொலை விழைந்து செய்யுனை
          அருவறு புலைத்தொழி லாரி யத்தொடு
          கருவறுப் பேமெனக் கனல ராமனும்
          வரிசிலை முகிற்கணை மாரி பெய்தனன்.

       4.  வரிசிலை யம்பினை வழங்க வீரர்கை
          உருவவே லோடுவா ளோச்ச இவ்வகைக்
          கருமனத் தொருவனுஞ் செம்மை காப்பரும்
          ஒருபகல் நாலிலொன் றொழிய வூக்கினர்.

       5.  வேலினும் வாளினும் மெலியத் தாக்கவே
          காலினுங் கடுகிய கணைப்பெ ருக்கினால்
          வேலையும் வாளையும் வீழ்த்திக் கையொடு
          மேலறுத் தருந்தொடர் விலக்கி மீண்டனன்.

       6.  மீண்டதுஞ் சுடுகணை விடுத்துப் போக்கியே
          நீண்டதிங் கவட்கென நேர்ந்த தோவென
          ஆண்டகை மனத்திடை யையுற் றேகையிற்
          காண்டனன் தம்பியுங் கைக லத்தலை.

       7.  மறவர்க ளுனையுமா வளைத்துக் கொண்டனர்
          அறிவிலி கெட்டனன் அரிவை சொல்லினால்
          மறிவிழி யையகோ மாண்டி ருப்பளே
          மறவர்கள் சூழ்வென மனந்து டித்துமே.

       8.  அம்பினா லவரையு மறுத்து மீட்டுமே
          எம்பிநீ யென்செய்தாய் ஏனிங் குற்றனை
          கொம்பையிந் நேரமார் கொண்டு சென்றரோ
          வம்புசெய் தாயடா மதியி லாதையோ.

       9.  ஊரென மறவர்கள் ஊங்குச் சூழ்ந்தனர்
          பேரமர் வீட்டியான் பெயர்ந்து போந்தனன்
          காரிகை யின்றொருக் காலும் வாழ்கிலேன்
          வீரநீ யேன்றனி விட்டு வந்தனை.
-------------------------------------------------------------------------------------------
       2. ஆளி - சிங்கம். மொய்ம்பு - வலி. 5. கால் - காற்று. தொடர் - வட்டம். 6. அவனையும் மறவர் வளைத்துக் கொண்டனர். 7. சூழ்வு - சதி. 9. ஊர் - ஞாயிறு திங்களைச் சூழும் ஊர்கோள்.