பக்கம் எண் :


இராவண காவியம் 389

   
       42. கவர்புன லேரியின் கரையின் மேல்புறம்
          சவரியென் றொருநமள் தவஞ்செய் கின்றனள்
          அவணரு மறைவில்நம் மவர்கள் வாழ்வுறு
          கவினிய பலகுடில் காண்பை யென்றனன்.

       43. விடைகொடு செலவினை மேவிப் போய்மரைக்
          கடிமலர்ப் பம்பையங் கரையைக் கண்ணுறீஇ
          வடிமையாற் றமிழரை மயக்கி யாரியர்க்
          கடிமைகொள் சவரியின் குடிலை யண்மினார்.

       44. அன்னரை யின்னரென் றறிந்த அன்னளும்
          மன்னவர் வருகென வணங்கி மற்றவர்க்
          கின்னுண வூட்டியாங் கிருந்து சென்றுமே
          தன்னர்வாழ் மறைவிடந் தன்னைக் காட்டினாள்.

       45. சிற்றிடைச் சவரிமுன் செல்லச் சென்றுமே
          நற்றவர் தந்நிலை நண்ணி யன்னர்பால்
          உற்றதை யுரைசெய வுள்ளங் கன்றியே
          எற்றவன் கொடுஞ்செய லென்ன வைதுமே.

       46. மறையவ ரெனத்தக மறைவில் வாழ்குநர்
          இறைமக கிட்கிந்தை இளையன் நண்பொடு
          நிறைதவ வேள்வியில் நிகரி லாரென
          அறைதரு மதங்கரின் அடிமை யாயினான்.

       47. மற்றவன் அண்ணனாம் வாலி வாழ்வறின்
          பெற்றனை சீதையைப் பெரிய தானையான்
          நற்றமி ழரசனை நலித லெண்மையாம்
          அற்றையே நாமும்வாழ் வடைந்த நாளெனா.

       48. தன்னல முடையவர் தமிழர் சாவினை
          இன்னல மெனக்கொளு மிழிஞர் சொல்லினை
          நன்னல மெனக்கொடு நடக்க வெண்ணினான்
          பொன்னலம் விரும்பியப் பொழுதைப் போக்கினான்.
-------------------------------------------------------------------------------------------
       42. கவர்தல் - குடித்தல். நமள் - நம்மவள், ஆரியப் பெண். 43. வடிமை - கட்டழகு. 47. நலிதல் - வெல்லுதல்.