24. வஞ்சமா யொருமர மறைவில் நின்றுமே அஞ்சியே வாலியின் ஆவி கொண்டவன் துஞ்சிய பின்னவன் தொலையச் சூழ்ச்சிசெய் நஞ்சன தம்பிக்கு நாடு தந்தனன். 25. கேடுடைப் பாவிசுக் கிரீவன் கொள்ளவந் நாடளித் தவனொடு நட்புக் கொண்டவன் பாடமை தருந்தமிழ்ப் படையைக் கொண்டெம தோடவன் பொருதிட உளங்கொண் டுள்ளனாம். 26. இம்மியு முளந்தனி லினப்பற் றென்பதை இம்மியு நினைந்திலா விரண்ட கத்தியல் எம்மினத் தமிழரால் எம்மை வென்றுனைச் செம்மலு மீட்டிடத் திடங்கொண் டுள்ளனாம். 27. என்றிரா வணன்சொலத் திடுக்கிட் டென்னைய என்றனுக் காகவா இலங்கைப் போர்க்களம் என்றனை விடுத்தவ ரிலங்கை நாட்டினைத் துன்றிடா தருள்கெனத் தொழுது சீதையும். 28. பெற்றவ ரினுமெனைப் பெரிது போற்றிடும் உற்றவர்க் கோவிடை யூறு காணுவன் மற்றவர் வருமுனம் மாதை நீக்கியே கொற்றவா இலங்கையின் குறையை நீக்குவீர். 29. அக்கையுந் தங்கையு மாகி நாடொறும் ஒக்கலா யுடனிருந் துண்டு மாடியும் தொக்கிய வெங்கையர் துயர இந்நகர் புக்கிடா முன்னெனைப் போக்கிக் காக்குவீர். 30. என்னைவைத் தகன்றிட எடுத்து முன்வளர்த் தன்னவற் கீந்தனன் எந்தை அன்னபோல் என்னைவைத் தகன்றிட எடுத்துப் பின்வளர்த் தன்னவற் கீந்திட லமையு மெந்தையே. ------------------------------------------------------------------------------------------- 26. இம்மி - சிறிதளவு, சிறிதுபொழுது. 30. என்னை - 1. தாய். 2. கணவன். பெற்றதாய் ஒரு செடியின் கீழ் வைத்தகல, முன் எடு்த்து வளர்த்துச் சனகன் தந்தை முறையாகி, இராமனுக்குக் கொடுத்ததுபோல, மனைவியாகப் பெற்ற இராமன் இலைக்குடிலில் தனியாக விட்டகல, பின் எடுத்துவந்து இனிது போற்றிய நீரும் எனக்குத் தந்தையே யாதலால் உரியவனாகிய அவனுக்குக் கொடுத்தல் அதனினும் சிறந்தது என்றனள். | |
|
|