23. என்னென விளையோன் செல்வி எங்கைவண் டமிழ்க்கிட் கிந்தை மன்னவ னான வீர வாலியை யன்னான் றம்பி தன்னொடு பொரும்போ துற்ற தம்பிமூ வரையாங் குள்ளான் பொன்னுடல் புரள மண்ணிற் பொருக்கெனக் கொன்றிட் டானாம். 24. அப்படி யாவென் செய்தா னனையென வன்பின் மிக்கான் இப்படி யொருங்கு கூடி யெதிர்ப்பினு மிமைப்பில் வெல்லும் ஒப்பரு திறலோன் வாய்மைக் கொருவனாம் வீர வாலி தப்பெனச் செய்தான் மற்றத் தகவிலா னிகன்று கொல்ல. 25. ஓகெடுத் தான்கொல் எந்தைக் குறவினைக் கொன்று கொன்று மாகடுஞ் சினத்தை மூட்டி வண்டமி ழிலங்கை வாழும் பாகெனு மொழியா யுன்னைப் பற்றிய நினைவைக் கூட ஆகெடுத் திட்டான் போலும் அறிவிலன் தெரியி னம்மா. 26. பாட்டியை யுடன்வந்தாளைப் படைவலான் றன்னைக் கொன்று மூட்டிய சினத்தீ நன்கு மூண்டெழ வேண்டிப் போலும் கேட்டினை மேலும் மேலுங் கிளர்ந்தெழச் செய்து வாரான் வாட்டடங் கண்ணி கொன்ற வாறுதா னென்னோ வென்ன. 27. அளித்துயிர்க் குடலா மென்ன அருந்தமி ழகத்தை யன்பிற் குளித்தொரு குறையு மின்றிக் கோன்முறை தவறா தாங்கு விளித்தசேய்க் கன்னை யென்ன விரும்பியே காக்கு மண்ணல் தெளித்ததை யெடுத்தவ் வாறே சீதையுந் தெளியச் சொல்லி. 28. அன்னமென் னடையெற் குன்னை யன்றியோர் துணையு முண்டோ தன்னல மில்லா நங்காய் தமிழர்தந் திறனோ ராது பின்னவ னுதவி கொண்டு பெருந்தமிழ்ப் படையி னோடென் றன்னைமீட் டேக வீங்கு தான்வரப் போகின் றாராம். 29. சந்தன மரத்தாற் செய்த தமிழ்க்கொடி நுடங்குந் தேர்க்கால் மைந்தரூர் பரிக்கா லோடு வழுக்கிடத் தெருக்க ளெங்கும் கந்தெறி களிற்றி யானைக் கமழ்கடாம் பெருகிப் பாயும் செந்தமி ழிலங்கை மூதூர் செருக்கள மாகு மென்றார். ------------------------------------------------------------------------------------------- 24. படி - உலகம். 26. படைவலான் - கரன், சுவாகுவுங் கொள்க. 27. கண்ணுறுபடலம் 23-26 செய்யுட்களைப் பார்க்க. 28. பின்னவன் - சுக்கிரீவன். | |
|
|