39. அன்னவர்த மிறைமகனோ அறந்திரண்ட பேருருவன் இன்னலரு மருள்வேண்டி னினிதேதந் துவப்பிப்பார் அன்னையெனக் கப்பனெனக் கன்றேகொன் றிருப்பாரேல் என்னசெய்வேன் புகல்தந்தா ரிதையொழிக கெடுமதியே. 40. பாட்டியையு மிளையளையும் பகையின்றிக் கொலைபுரிந்த கேட்டினும்போர் செயவருதல் கேடன்றோ சிறியாரேற் கூட்டிலுறை குருவியைப்போற் கொன்றிருப்பா ரலவோவெந் நாட்டினிலா ரிவர்போல நன்னலஞ்செய் பெரியாரே. 41. ஐயாநும் பேச்சிலெனக் கையுறவுண் டாகிறது வெய்யோனீ யாரோகாண் விடைகொண்டே னெனவனுமன் கையாழி தனையீயக் காரிகையுங் கண்ணிலொற்றித் துய்யோனே யானவர்க்குச் சொன்னதெனச் சொல்லீரே. 42. கனவினுமே தமிழர்பகை காணுதல்தீ தெனவுரையும் புனைமணிமா மதிலிலங்கை போந்தின்னே தமிழிறைவன் தனைவணங்கி மன்னிப்புத் தான்கேட்டுக் கொண்டடியாள் தனையடைந்தே யயோத்திநகர் தனையடையச் சொல்வீரே. 43. என்றனுக்காத் தென்னிலங்கை இறைமகனோ டிகல்புரியின் பொன்றிடுவே னெனச்சொல்லிப் புகச்சொலுந் தனியாக என்றவள்வேண் டிடவனுமன் ஏந்திழையே யவ்வாறே சென்றுரைப்பே னெனப்பின்னுஞ் சிறுமதியான் பெருந்தேவி. 44. அன்னையுனை யான்கண்டே னென்பதனுக் கடையாளம் என்னவெனி லுன்கணவன் ஏதுரைப்பே னெனமயிலுந் தன்னவன்பாற் கொடுமென்று சடைவில்லை தனைக்கொடுத்துப் பின்னுமொரு தரங்கூறிப் பெய்வளையோ டகன்றனளே. 45. ஆங்குநின்று திரிசடையோ டவள்போன பின்னனுமன் ஓங்குமலர் மண்டபமும் ஒயிலியலா ராடிடமும் தூங்குமெழி லசோகவிளஞ் சோலையத னியற்கையினைப் பாங்குடனே கண்குளிரப் பார்த்துவெளிப் புறப்பட்டான். | |
|
|