பக்கம் எண் :


436புலவர் குழந்தை

   
        31.   செங்கை வேலவ சேவடி போற்றியான்
             இங்கு வந்த இழிசெய லன்னவன்
             மங்கை தன்னை யறிந்து வருகென
             எங்கள் மன்னவ னேவிட வந்தனன்.

        32.   கண்டு மீள்கையிற் காவலர் பற்றியே
             கொண்டு வந்து நிறுத்தினர் கொற்றவ
             பெண்டு பிள்ளையோ டுண்டு பிழைக்குவன்
             தொண்ட னேனருள் கென்னத் தொழுதனன்.

        33.   மன்ன னேவலில் வந்தனை யென்னினும்
             துன்னி நேரினி லென்னிடஞ் சொல்லுதல்
             நன்ன ரோடு நடைமுறை யன்றியும்
             அன்ன வன்மனை யாளையான் காட்டனோ.

        34.   என்ன சொல்லினாள் சீதை எனவவள்
             மன்ன னைத்தனி யாக வரும்படி
             சொன்ன தாயெனைச் சொல்லுக என்றனள்
             என்ன வோத இளையவன் அண்ணலே,

        35.   அயல வன்மனை யாளைச் சிறையினிற்
             பயில வைப்பதி லாகும் பயனுமென்
             மயிலை யிவ்வனு மானுடம் போக்கல்நற்
             செயல தாகுமச் சீதை கணவனும்,

        36.   செற்ற நீங்கி யகன்றுமே செல்குவன்
             மற்ற வன்கை வலியை மதிப்பிடிற்
             பொற்றொ டிதனைப் போக்கலே நன்மையாம்
             குற்ற நீக்கிக் குணத்தினைக் கொள்கெனா.

        37.   ஏது சொல்லினாய் மானமி லாதுநீ
             மாது டன்பிறந் தும்பிற வாதவா
             யாது நற்குணம் ஆரியர் தம்மிடம்
             போது வாயவன் கால்தொழப் புல்லியா.

        38.   உன்னு டன்பிறந் தாளை யுருக்குலைத்
             தின்னு யிர்கொல் லிழிதகை யாளரை
             நன்னர் வில்வலி யாரெனு நாணிலீ
             பின்னை வந்து பிறந்தனை கன்மனா.