பக்கம் எண் :


இராவண காவியம் 439

   
          8.   கண்ட னன்மலர்க் காவக
              மண்ட பந்தனில் மதிமுகக்
              கெண்டை வேல்விழிக் கிளிமொழி
              வண்டு மொய்குழல் வாழ்கிறாள்.

          9.   இன்னை யேதனி யெய்தியே
              மின்னல் வேலனை வேண்டியே
              தன்னை மீட்குதல் தகவெனச்
              சொன்ன தாகநீர் சொல்கென.

          10.  என்னி டத்தவள் இயம்பினாள்
              மின்னி டத்தொளிர் வில்லியே
              தன்னெ னத்தகு தமிழர்கள்
              பொன்னி டத்தொரு பொருளரோ.

          11.  என்று ரைத்திதோ வென்றவள்
              மன்ற லங்குழல் மணிதர
              ஒன்ற மொய்த்தக ணொற்றியே
              அன்றி மெய்ப்புக ழனுமனே.

          12.  தப்பு வேண்டிமுன் தாழ்ந்துமன்
              னிப்பு வேண்டுதல் நெறிபல
              இப்ப வேபடை யெழுகெனாச்
              செப்பு வான்பிற செய்தியே.

          13.  அக்கை மார்சில ரன்னைமார்
              தக்க தோழியர் தங்கைமார்
              தொக்க செந்தமிழ்த் தோகைமார்
              ஒக்க லேயவட் கூரெலாம்.

          14.  தங்கை வாழிய தன்மையில்
              அங்க னேதக வையவுன்
              மங்கை யின்பொடு வாழ்ந்திடச்
              செங்கை வேலவன் செய்துளான்.

          15.  போற்றி யேபிறர் பொருளினை
              ஊற்ற மாயினி தோம்பிடும்
              மாற்றி லாத்தமிழ் மக்களில்
              ஏற்ற மேதமி ழிறைவனே.
-------------------------------------------------------------------------------------------
          13. தோகைமார் - சிலர் அக்கைமார், சிலர் தங்கைமார் என்க. ஒக்கல் - சுற்றத்தார். 15. ஊற்று - ஊன்றுகோல், ஆதரவு.