பக்கம் எண் :


452புலவர் குழந்தை

   
           20.   வளைபயில் கிடங்கு சூழ்ந்த மதிலணி யிலங்கை வந்த
                நுளையரீங் கறவின் றோடு நூறியே தொலைக்க வேண்டும்
                களையினை முளையி லேயே களைந்தெறி யாது விட்டு
                விளைவடை யாது சோம்பும் வீணரு முலகி லுண்டோ.

           21.   கூரறி வின்றி யுண்டு தொகுத்தசெய்ந் நன்றி கொன்ற
                ஆரிய முனிவர் தம்மை யலறவே தொலைக்க வேண்டும்
                பேரெலி தம்மை வீட்டிற் பிழைத்திரென் றிரக்கங் காட்டுங்
                காரறி வாளர் தமமைக் கண்டதுங் கேட்ட துண்டோ.

           22.   பாடறிந் தொழுக வல்ல பழந்தமி ழரசர் கோவே
                கூடியா ரியரை நம்மைக் கொல்லவே யிங்கு வந்த
                கோடரிக் காம்பை யெல்லாங் குருத்திடா தொழித்தே மேலும்
                கேடுடை யவைதோன் றாமற் கெல்லியே யெறிய வேண்டும்.

           23.   புரிசைசூ ழிலங்கை முற்றப் போந்துள வடவர் தம்மைக்
                குரிசிலின் றேநாங் கொன்று கூட்டொடு தொலைக்க வேண்டு
                மரிசியோ டளைய கல்லை யகற்றிடா தக்கல் லோடே
                கரிசனத் தொடுசோ றாங்குங் கயமைபோல் மயன்மை யுண்டோ.

           24.   ஒட்டிய வுறவு வீய வூறுசெய் யயலார்ப் பேணும்
                கெட்டவ னெஞ்சர் தம்மைக் கிளையொடு போக்க வேண்டும்
                தொட்டு ணவாக்குங் கட்டுச் சோற்றிடை எலியை வைத்துக்
                கட்டியே பயணஞ் செய்வோன் கதையினை மறக்க லாமோ.

           25.   அடலுற வினத்தைப் பாழு மாரியர்க் குதவி செய்யும்
                கொடியரின் றோடி லாது கொன்றுமே தொலைக்க வேண்டும்
                உடலிடைத் தோன்றிற் றொன்றை யுரியது சிறிய தென்றே
                சுடலுறச் சுட்டுப் போக்காத் துஞ்சுவா ருலகி லுண்டோ.

           26.   உடன்பிறந் தவர்க ளென்னா தோரகத் தவர்க ளென்னா
                துடன்பயில் தமிழ ரென்னா துறவென்னா தொறுக்க வந்த
                உடன்பிறந் துடலைக் கொல்லு முறுபிணி யனையார் தம்மை
                உடன்கொலை புரிந்தே யின்றோ டொழித்தனங் கடமை யாமே.

-------------------------------------------------------------------------------------------
           23. புரிசை - மதில். அளைய - கலந்த. மயன்மை - மயக்கம், அறியாமை. 25. அடல்உற - கொல்ல. சுடல் - சூட்டுக்கோல், காரம்.