சேயோன் | அறுசீர் விருத்தம் | 63. என்றவன் இயம்பச் சேயோன் இருந்தமி ழகத்தை முற்றும் ஒன்றிய படியே தப்பா தொருகுடை நிழலி லோம்பும் குன்றுறழ் குவவுத் தோளாய் குளிர்தமிழ் மக்கள் போற்ற என்றனைப் பயந்த தெற்கென் றின்னன பகர லானான். | எண்சீர் விருத்தம் | 64. வளைபட்ட வெலிமிக்க பகையுற்று வந்தே மலைமுற்றி வலிதொக்க வளைபட்ட தாயின் அளையட்ட வரிசற்று வெளியுற்று நூறி அவையத்த னையும்வெற்றி பெறவுற்றல் போல உளைபட்ட வடவோரை வெலநானி ருக்க ஒளிமிக்க வடிவேலைத் தொடவெண்ண லாமோ துளைபட்ட வமையாழி னிசைபெற்ற மஞ்ஞைத் தொகையுற்று நடமாடு முயர்குன்ற நாடா. 65. அத்தைக்குச் சினைகொன்று பகைதேடிக் கொண்ட அறிவற்ற கொலைகார வடவோரை யீதோ குத்துக்குப் பலநூறு குமுறுக்குப் பலவாக் குலைவிண்ட தெங்கென்னத் தலைகொய்து வருவேன் முத்துக்கு வளையேறி முகம்வைத் துறங்க முருகத்த னையுமுள்ள முருகப்ப டிந்து தித்திக்குந் தேனுண்டு வரிவண்டு பாடு்ஞ் செந்தாம ரைப்பொய்கை சூழ்பண்ணை நாடா. 66. அப்பாநீ யிப்போதே போவென்று சொன்னால் அறிவற்ற வடவோரை யொருசுற்றி லேயே தப்பாமற் கழுகுண்ண விரையாகத் தருவேன் தந்தேயுன் றிருமுன்னர் விரைந்தோடி வருவேன் ஒப்பேது மில்லாது திசையெட்டுந் தேடி ஒளிமிக்க கதிரோனு முறவுக்கு நாட எப்போது மனமொப்ப தெனமிக்க வாடி எதிரின்றித் தனிநிற்கு மிணையற்ற புகழோய். ------------------------------------------------------------------------------------------- 63. எற்கு - எதற்கு. 64. வலிது ஒக்க - வலிகொண்டு ஒன்றாக. வளைபடல் - வளைத்தல். அளை - குகை. உளை - அழுகை. அமை - மூங்கில். 65. தெங்கு - தென்னை. உக்கு - ஈன்று. முருகு - மணம். முருகு அத்தனையும் உள்ளம் உருக படிந்து - மண முழுதும் மனமுருகும்படி பொருந்தி. வரி - பாட்டு. சங்கு தூங்கத் தேன் உண்டு வண்டு வரிபாடும். பண்ணை - வயல். | |
|
|