20. முதுக்குறை வின்மையால் முரண்கொ ளாரியர் நதுக்கென வெருவியே நடுந டுங்கிடப் பொதுக்கென முகிலிடைப் புகுந்து மேக்குயர் மதிக்குடை யுயர்த்தியே மருவி யாடுவர். 21. கேளொடுங் கிளையொடுங் கெழுமி யின்றொடு நாளுலந் தனபகை நாடி னார்க்கெனா ஆளினை யூக்கியே யணிவ குத்தொளி வாளினை நாட்டியே மறவ ராடுவர். 22. கோலிய போர்க்களங் குறித்த வொன்னலர் வாலிழை யவர்நனி மகிழ்ந்து வாழ்வுறுங் காலம தின்றொடு கழிந்த தென்றொளி வேலினை நாட்டியே வீர ராடுவர். 23. அடிமிசை யொலிகழ லஞ்ச வீக்கியே பொடிபட வொன்னலர் பொன்ற நூறிட மடிபட மறவர்கள் மறஞ்சி றந்திடத் துடியினை முழக்கியே சுற்றி யாடுவர். 24. வெற்றிவை வாள்முனை வீழ்ந்து தன்னருஞ் சிற்றுயிர் வழங்கின னொருவன் தீர்கிலாக் கொற்றவாள் கிழித்துடற் குருதி யீந்தனன் மற்றவர் மறத்தினை வகுத்தல் வேண்டுமோ. 25. துற்றிய வினியசெஞ் சோற்றுச் செய்கடன் முற்றுற வாரிய முனைப்பு லங்கெட வெற்றியை யெய்திட வேண்டி வெற்றியாங் கொற்றவை பரவியே குழுமி யாடுவர். 26. பகலவ னகலுமுன் பகைப்ப னிக்குலத் தொகையினைக் கதிரெனத் தொலைத்தி லேமெனில் தகதக வெனவொளிர் தழலில் வீழ்ந்தியாம் புகழொடு தெவ்வர்முன் பொன்று வேமென்பார். ------------------------------------------------------------------------------------------- 20. முதுக்குறைவு - பகுத்தறிவு. முரண் - மாறுபாடு. நதுக்கென - திடீரென. பொதுக்கென - விரைவினும் எளிதினும். மேக்கு - மேல். 23. அஞ்ச, பொன்ற ஆடுவர். வீக்குதல் - கட்டுதல். மடி - சோம்பல். 25. துற்றல் - உண்டல். | |
|
|