பக்கம் எண் :


482புலவர் குழந்தை

   
         19.   இயலோமனை நூலின ரெண்பெறுகைச்
              செயலோவின தேர்ந்தில மூடுருவிப்
              புயலோடு பொருந்திய விந்நகருக்
              கயலேவர வல்லவோ வல்லனவே.

         20.   கண்பெற்ற பெரும்பொருள் கண்டனமஃ
              துண்புற்றது வோகன வோநனவோ
              எண்பெற்றில தென்னினு மேபொறிகள்
              பண்புற்றன வுற்றன பன்னலமும்.

         21.   என்றங்கவ ரின்னன வெண்ணினராய்ச்
              சென்றங்குத் திறந்த வெளிப்புறமோர்
              குன்றந்தனி லேநிலை கோலியபின்
              ஒன்றங்கென வொற்றரை விட்டனரே.

         22.   அன்னார்விரை வாகவே சென்றெமது
              மன்னாபடை வந்த தெனத்தொழுது
              சொன்னாரவர் தொல்லை கொடுத்ததையும்
              தென்னாரிறை சீறி யெழுந்தனனே.

         23.   சொல்லாண்மை பழுத்துயர் தூயவரைப்
              பொல்லாவட வாரியர் போர்நிலையை
              வல்லேயறிந் தோடி வரவிரைவாய்ச்
              செல்லீரென வேயவர் சென்றனரே.

         24.   அவர்சென்றபி னாரிய னண்ணன்முடி
              கவர்கென்றிரு காலில் விழுந்தவனைச்
              சுவரொன்றுயர் தொன்மதில் முற்றுமியல்
              உவரம்பட வோதென வோதினனே.

         25.   தன்னோரடி யோடு தரைப்படவே
              இன்னானுள வோதி யிருக்கையிலே
              பின்னேகிய ராகிய பேரியலார்
              அன்னான்விழி தன்னை யடைந்தனரே.
-------------------------------------------------------------------------------------------
         19. எண்பெறு கை செயல் - அளவுபட்ட கைத்திறன். அல்லன - வேறு நகர்கள். 20. அஃது உண்பு உற்றதுவோ - அக்கண் பார்த்தறிந்ததோ, அல்லது நகர் கண்ணைக் கவர்ந்து கொண்டதோ. எண் பெற்றிலது - எண்ணியறிய முடியவில்லை. 24. உவரம் - இனிமை, நன்கு.