28. ஒருமையுங் குறைவி லாத வூக்கமு மாக்கந் தேடும் அருமையு மறிவு முற்றோர்க் காவன செய்து காக்கும் பெருமையுந் தகவுஞ் சால்பும் பெருகிய தமிழர் தங்கள் உரிமையைப் பறிப்பான் போல யுயிரினைப் பறித்தா னந்தோ. 29. புரண்டதி யாக்கை மண்ணிற் புலர்ந்தது குருதி வெள்ளம் திரண்டது தமிழர் வெள்ளஞ் செறிந்தது திசைகள் நான்கும் வெருண்டது வடவர் சேனை வீழ்ந்தது போரின் கொட்டம் இருண்டது நெடிய வான மெழுந்தது பெருங்கூப் பாடே. 30. கும்பலாய் மறவ ரோடிக் கோயிலைக் குறுகி யையை தும்பையந் தொடையல் வேய்ந்து சுடுகணை தூவி யொன்னார் அம்பினுக் குயிர்தந் தோட வாரம ருழக்கி யீறாத் தம்பியும் வடவ னம்பாற் சாய்ந்தன னென்னா முன்னம். 31. அரியணை யிருந்த மன்ன னாவென வலறிக் கீழே கரியென வுருண்டு வீழ்ந்து கைபிசைந் தழுங்கி யுள்ளம் உருகியே திரண்டு கண்க ளூற்றிருந் தொழுக மேனி பொருமியே பெருமூச் சாடிப் புலம்பினன் வாய்விட் டம்மா. | கொச்சகம் | 32. தம்பியோ வென்னைத் தனிவிட் டழுகென்றே நம்பியோ முன்னை நடந்தாயோ ஞாட்பினிடைத் தும்பியோ வென்னத் தொகைநின்ற வம்பலர்கள் வெம்பியோ வென்னத்தான் வென்றுகளங் கொண்டாயோ. 33. தம்பி யிருவரெனத் தாழாத் தருக்கழிந்தேன் உம்பி தனையா னுயிரோ டிழந்தேனென் எம்பி யுனையு மிழந்தே யிறவாமற் கொம்பை யிழந்த கொடுமரம்போல் நின்றேனே. 34. தென்னா வுளமினிக்குஞ் செந்தமிழா தென்னிலங்கை மன்னா வெனக்கு மலைக்குமலை யாய்வந்த பின்னா தமிழ்ப்புலவர் பேச்சுக் குகந்தகும்ப கன்னா வுனையென்று காண்பேன் கடையேனே. 35. பாட்டி யருங்கொலையும் பாவையவள் வன்கொலையும் வாட்டானை யோடுகதிர் வாட்கரன் றன்கொலையும் கேட்டேயின் றுன்கொலையுங் கெழுதகையோ யானின்னும் ஓட்டை மனத்தோ டுயிர்தாங்கி நின்றேனே. ------------------------------------------------------------------------------------------- 32. ஞாட்பு - போர். தும்பி - யானை. | |
|
|